தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள அயன்செங்கல்படை பஞ்சாயத்திற்கு உட்பட்டு கே.குமாரபுரம் கிராமம் உள்ளது. இங்கு சுமார் நூற்றுக்கு மேற்பட்ட வீடுகள் உள்ளது. இங்குள்ள கிராம பொதுமக்களுக்கு அருகே மந்திக்குளம் கிராம வைப்பாற்றில் போர்வெல் ( ஆழ்துளை கிணறு)அமைத்து அங்கிருந்து குழாய் மூலம் குடிநீர் கொண்டுவரப்பட்டு குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வந்தது.
இந்நிலையில் 6 மாதங்களுக்கு முன்பு குழாய் உடைப்பு ஏற்பட்டு பொது மக்களுக்கு குடிநீர் வழங்குவது தடைப்பட்டு வந்ததாகவும், அதன் பின்னர் வாரம் ஒரு முறை குடிநீர் வழங்கப்பட்டு வந்ததாகவும் தற்போது சில வாரங்களாக தொடர்ந்து குடிநீர் வழங்கப்படவில்லை என்றும் பொதுமக்கள் சார்பில் கூறப்படுகிறது.
இந்நிலையில் கடந்த மாதம் பொதுமக்கள் சார்பில் விளாத்திகுளம் யூனியன் அலுவலக அலுவலர்களுக்கு குடிநீர் பிரச்சனை தொடர்பாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில் நேற்று உடனடியாக குடிநீர் வழங்க வலியுறுத்தி கே.குமாரபுரம் கிராம பொதுமக்கள் காலி குடங்களுடன் சென்று மனு வழங்குவதற்காக விளாத்திகுளம் யூனியன் அலுவலக வளாகத்தின் உள்ளே அமர்ந்து காத்திருந்தனர்.
பிடிஓ காமராஜ் கள ஆய்வுக்கு சென்று விட்டதால் மனு பெற வேறு எந்த அதிகாரிகளும் வராததால் பொதுமக்கள் காலி குடங்களுடன் தாலுகா அலுவலகம் உள்ளே சென்று அமர்ந்து போராட்டம் நடத்தினர்.
இதனையடுத்து அதிகாரிகள் பொதுமக்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். தற்காலிகமாக பொது மக்களுக்கு குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று, புதிய போர் அமைக்க ஏற்கனவே நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டதன் அடிப்படையில் கே.குமாரபுரம் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் புதிய போர்வெல் அமைத்து தரப்படும் என்று அதிகாரிகள் கூறியதை தொடர்ந்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.











