நாங்குநேரியில் நடந்த அரசு விழாவில் முதல்வரை, துணை முதல்வர் மு.க ஸ்டாலின் என சபாநாயகர் அப்பாவு கூறியதால் பரபரப்பு ஏற்பட்டது.
நெல்லை மாவட்டம் நாங்குநேரி தாலுகாவுக்கு உட்பட்ட திருக்குறுங்குடி ஏர்வாடி, களக்காடு, நாங்குநேரி மற்றும் மூலைக்கரைப்பட்டி ஆகிய பேரூராட்சிகளுக்கான புதிய தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்ட பணிகளின் தொடக்க விழா இன்று நடந்தது.
சபாநாயகர் அப்பாவு தலைமையில் அனைத்து பேரூராட்சி பகுதியிலும் தனித்தனியாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அரசு விழா நிகழ்ச்சிகளில் நாங்குநேரி தொகுதி எம்எல்ஏ ரூபி மனோகரன் மற்றும் குடிநீர் திட்ட அதிகாரிகள், திமுக, காங்கிரஸ் நிர்வாகிகள்,பேரூராட்சி நிர்வாகிகள் உட்பட பலர் பங்கேற்றனர்.
நாங்குநேரியில் நடந்த மேல்நிலை நீர்த் தேக்க தொட்டி கட்டும் பணியை சபாநாயகர் அப்பாவு மற்றும் ரூபி மனோகரன் தொடங்கி வைத்தனர்.
அதனைத் தொடர்ந்து நாங்குநேரி பேரூராட்சி தலைவர் கல்யாணி அனைவரையும் வரவேற்றார்.
பின்னர் இத்திட்ட பணிகள் குறித்து சபாநாயகர் அப்பாவு பேசினார். அதில்,’ இப்பணிகள் தொடங்கப்பட்டு 7 மாதங்கள் ஆகியும் இன்னும் நிறைவேற்றப் படவில்லை. இராஜஸ்தானை சேர்ந்த ஒப்பந்ததாரர் இப்பணியினை மேற்கொள்வதால் அவரை கண்டுபிடிக்கவே மிகவும் சிரமமாக உள்ளது. இந்நிலையில் ஆளுநர் மாளிகையில் முதல்வரை சந்தித்து குடிநீர் வடிகால் வாரிய உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை செய்த பின் தற்போது பணிகள் நடைபெற்று வருகிறது’ என்றார்.
அப்போது 7 மாதங்களுக்கு முன் குடிநீர்த் திட்ட பணிகள் தொடக்க விழா குறித்து பேசியபோது “பணிகளை தொடங்கி வைத்த துணை முதல்வர் மு.க.ஸ்டாலின்” என்று மேடையில் பேசியது அங்கிருந்தவர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.
தமிழக சட்டசபையை நடத்துகிற பொறுப்பு வசிக்கும் சபாநாயகர், சாதாரண ஒரு கூட்டத்தில் தெளிவற்ற நிலையில் மனக் குழப்பத்துடன் பேசியதால் முதல்வரை துணை முதல்வர் என்று மாற்றி குறிப்பிட்டதாக அங்கிருந்தவர்கள் கருத்து தெரிவித்தனர்.
.













