கணபதி அடுத்த சின்னவேடம்பட்டி குப்புசாமி லே-அவுட் பகுதியைச் சேர்ந்த யோகநாதன் என்பவரின் மகன் வீரப்பன் (33 ).இவர் மார்க்கெட்டிங் தொழில் செய்து வருகிறார். கடந்த ஓராண்டு காலமாக ஊரடங்கு இருந்து வருவதால் ஆன்லைன் மூலம் வீட்டில் இருந்தபடியே வேலை செய்து வருகிறார் .மேலும் வீரப்பன் உடல் எடை அதிகமாக இருந்து வந்த காரணத்தினால் உடல் எடை குறைப்பதற்காக அதே பகுதியைச் சேர்ந்த பிந்து என்ற பெண்ணுடன் ஆலோசனை நடத்தினார். இதுகுறித்து பிந்து உடல் எடை குறைப்பு குறித்த ஆலோசனைகளை வழங்கி வந்தார். இவர்களது பழக்கத்தை அறிந்த வீரப்பனின் மனைவி இது குறித்து கேள்வி எழுப்பினார். பின்னர் வீரப்பனின் மனைவி இதுகுறித்து வீரப்பனிடம் தகராறு செய்ததாக கூறப்படுகிறது.
இந்த விவகாரம் பிந்துவின் தந்தை பாலகிருஷ்ணன் மற்றும் அவரது குடும்பத்தாருக்கு தெரிய வந்தது. இதையடுத்து பிந்துவின் குடும்பத்தார் வீரப்பன் குடும்பத்தாரை சமாதானப் பேச்சுவார்த்தைக்கு நேற்று அழைத்தனர். அதன் பேரில் வீரப்பன் தனது சகோதரி மற்றும் மனைவியுடன் பிந்துவின் வீட்டிற்கு வீடு அமைந்துள்ள மடாலயம் ரோடு மணி நகர் பகுதிக்கு சென்றார். அங்கு வீரப்பன் பிந்துவுடன் தனக்கு எந்த தொடர்பும் இல்லை என்றும் கூறியிருக்கிறார்.பின்னர் அங்கிருந்து புறப்பட்டு சென்ற பின்
மீண்டும் வீரப்பனை பிந்து செல்போன் மூலம் அழைத்து தனது வீட்டிற்கு வருமாறு கூறியிருக்கிறார் .அதன்பேரில் பிந்துவின் வீட்டிற்கு சென்றார்.
அப்போது பிந்துவின் தந்தை பாலகிருஷ்ணன் மற்றும் அவரது உறவினர்கள் மணிகண்டன் மற்றும் ஆறுமுகம் ஆகியோர் வீரப்பனை தாக்கத் தொடங்கினர். மேலும் கற்களை எடுத்து தலையில் தாக்கினர். இதில் படுகாயமடைந்த வீரப்பன் அங்கு தனது செல்போன் மற்றும் பைக்கை விட்டு விட்டு தப்பி ஓடினார். தொடர்ந்து வீரப்பன் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து வீரப்பன் சரவணம்பட்டி போலீசில் அளித்த புகாரின் பேரில் போலீசார் பாலகிருஷ்ணன் மணிகண்டன் ஆறுமுகம் ஆகியோரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.











