அதிமுக பொதுக்குழு கூட்டத்தை நடத்த தடையில்லை என்ற சென்னை உயர்நீதிமன்றத்தின் ஒரு நீதிபதி அமர்வின் தீர்ப்பை எதிர்த்து பொதுக்குழு உறுப்பினர் சண்முகம் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு இரவோடு இரவாக நீதிபதிகள் துரைசாமி, சுந்தர் மோகன் ஆகியோர் அமர்வில் விசாரணைக்கு வந்தது.
நள்ளிரவு தொடங்கி அதிகாலை 4 மணி வரை நடைபெற்ற விசா ரணையின் முடிவில்,’ பொதுக்குழு கூட்டம் நடத்தலாம். பொதுக்குழுவில் ஏற்கனவே குறிப்பிடப்பட்ட இருபத்தி மூன்று வரைவு தீர்மானங்களை தவிர கூடுதல் தீர்மானங்களை நிறைவேற்ற கூடாது’ என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இதனால் ஒற்றைத் தலைமை உள்ளிட்ட பிற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட முடியாது என்ற மகிழ்வில் பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். அதுமட்டுமன்றி பன்னீர்செல்வம் பொதுக்குழு கூட்டத்தில் கலந்து கொள்வார் என்று வைத்தியலிங்கம் கூறினார்.
சென்னை அண்ணாநகரில் உள்ள நீதிபதி துரைசாமி வீட்டில் விசாரணை நடைபெற்றது எடப்பாடி பழனிசாமி தரப்பில் வழக்கறிஞர்கள் ராஜகோபால், விஜய் நாராயணன் ஆகியோரும், பன்னீர்செல்வம் சார்பில் வழக்கறிஞர்கள் அரவிந்த பாண்டியன் , திருமாறன் ஆகியோரும் ஆஜராகினர்.
விசாரணையையொட்டி நீதிபதி வீட்டின் முன்பு தடுப்புகள் அமைத்து பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப் பட்டிருந்தது.












