இரணியலை அடுத்த முக்கலம்பாடு பகுதியை சேர்ந்தவர் சுனில் குமார் (வயது 39). எலக்டிரீசியன். இவரது மனைவி ஜியோ மைக்கிள் ஸ்டானி. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். சுனில் குமாருக்கும் அவரது மனைவி ஜியோ மைக்களிள் ஸ்டானிக்கும் இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்படும்.
இதனால் சுனில் குமார் மனைவியுடன் கோபித்து கொண்டு வீட்டை விட்டு வெளியே சென்றுவிடுவார். பின்னர் ஒரு வாரத்திற்கு பிறகு மீண்டும் வீட்டுக்கு வருவார்.
கடந்த 10-ந் தேதியும் சுனில்குமாருக்கும், அவரது மனைவிக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டது. அதன்பின்பு, சுனில் குமார், குழந்தைகளை பள்ளியில் விட்டு வருகிறேன் என்று மனைவியிடம் கூறிவிட்டு சென்றார். அதன்பின்பு அவர் வீடு திரும்பவில்லை. இதனால் பதறிபோன மனைவி ஜியோ மைக்கிள் ஸ்டானி இது பற்றி உறவினர்களிடம் கூறினார். அவர்கள் வழக்கம் போல சுனில் குமார் திரும்பி வருவார் என்றனர். இந்த நிலையில் நேற்று அப்பகுதியில் உள்ள ஒரு தோட்டத்தில் அழுகிய நிலையில் ஒரு ஆண்பிணம் கிடப்பதாக இரணியல் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அவர்கள் விரைந்து சென்று பிணத்தை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.
இந்த தகவல் அறிந்து சுனில் குமாரின் மனைவி ஜியோ மைக்கிள் ஸ்டானியும், உறவினர்களும் அங்கு சென்று பார்த்தனர். அப்போது அங்கு அழுகிய நிலையில் பிணமாக கிடந்தவர் சுனில் குமார் என்று தெரிய வந்தது.
இதையடுத்து போலீசார் சுனில் குமாரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சுனில் குமார் எப்படி இறந்தார்? அவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டாரா? அவரது தற்கொலைக்கு காரணம் என்ன? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.









