கோவை சாய்பாபா காலனி கே .கே புதூர், காளியப்பன் வீதியை சேர்ந்தவர் ஜான் பாஷா (40) ஆட்டோ டிரைவர். ஒரு வழக்கு தொடர்பாக சில தினங்களுக்கு முன்பு இவர் கைது செய்யப்பட்டார். இவரது ஆட்டோவை போலீசார் பறிமுதல் செய்து போலீஸ் ஸ்டேஷனில் நிறுத்தி இருந்தனர் .நேற்று ஜாமினில் வெளியே வந்த ஜான் பாஷா சாய்பாபா காலனி போலீஸ் ஸ்டேஷனுக்கு சென்றார். அங்கு பணியில் இருந்த போலீஸ் ஏட்டு சந்திரசேகரிடம் தனது ஆட்டோவை தருமாறு கேட்டார். அதற்கு அவர் நீதிமன்ற உத்தரவு வந்ததும் பெற்றுக் கொள் என்று கூறினார்.
இதனால் ஆத்திரமடைந்த ஜான் பாஷா போலீஸ் ஏட்டு சந்திரசேகரை தகாத வார்த்தைகளால் திட்டி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. பின்னர் அவரது ஆட்டோவை பெட்ரோல் ஊற்றி தீ வைக்க முயன்றார். இதை பார்த்த போலீஸ் ஏட்டு சந்திரசேகர் அதை உடனே தடுத்து விட்டார். இதையடுத்து ஜான் பாஷா ஏட்டு சந்திரசேகருக்கு மீண்டும் கொலை மிரட்டல் விடுத்தார். இது குறித்து சாயிபாபா காலனி போலீஸ் ஸ்டேஷனில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் ஆட்டோ டிரைவர் ஜான் பாட்சாவை கைது செய்தனர். இவர் மீது கொலை மிரட்டல்,அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்தல் உட்பட 3 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.













