கோவை அம்மன் குளம் தாமு நகர் அருகே 2020 ஆம் ஆண்டு பொங்கல் விழாவை முன்னிட்டு கபடி போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் அதே பகுதியை சேர்ந்த நவீன்குமார் என்ற வாலிபர் 3 வெளியூர் கபடி வீரர்களை வைத்து விளையாடி போட்டியில் வெற்றி பெற்றார். போட்டி முடிந்த பிறகு அம்மன் குளத்தை சேர்ந்த விஜயகுமார் என்பவர் தனது நண்பர்கள் மூன்று பேருடன் சென்று , வெளியூர் வீரர்களை வைத்து விளையாடியது தொடர்பாக நவீன்குமாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அப்போது ஆத்திரமடைந்த விஜயகுமார் மறைத்து வைத்திருந்த கத்தியால் நவீன் குமாரை குத்தி விட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். நவீன்குமார் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இது தொடர்பாக ராமநாதபுரம் போலீஸார் வழக்கு பதிவு செய்து விஜயகுமார்,ஹரிஹரன்,கண்ணன் ஆகிய மூவரையும் கைது செய்தனர்.
இந்த வழக்கு விசாரணை கோவை குண்டு வெடிப்பு சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இன்று விசாரணைக்கு ஆஜராக வந்த கைதிகள் மூன்று பேர் மீதும் மர்ம நபர்கள் திடீர் தாக்குதல் நடத்தினர்.
நீதிமன்றத்திற்கு வெளியே நடத்தப்பட்ட தாக்குதலில் கத்தியால் குத்தப்பட்ட நிலையில் வழக்கின் முதல் குற்றவாளியான விஜயகுமார் மற்றும் மூன்றாவது குற்றவாளியான ஹரிஹரன் இருவருக்கும் படுகாயம் அடைந்தனர். கத்தியால் குத்திய மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பி சென்றனர். காயமடைந்து ரத்த வெள்ளத்தில் கிடந்த இருவரும் மீட்கப்பட்டு கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்க பட்டுள்ளனர்.














