மத்திய அரசு கடந்த சில நாட்களுக்கு முன்பு திருத்தப்பட்ட புதிய மோட்டார் வாகன சட்டத்தை நிறைவேற்றியது. இதில் வாகனம், ஒட்டுனர் தொடர்பான நடவடிக்கைகளுக்கு அபராத கட்டணம் பல மடங்கு உயர்த்தப்பட்டது. மேலும் சாலை விதி மீறல்களுக்கு அபராத தொகையாக 10 மடங்கு உயர்த்தியது.
இதை குறைக்க வலியுறுத்தி அகில இந்திய மோட்டார் டிரான்ஸ்போர்ட் காங்கிரஸ் இன்று ஒரு நாள் அடையாள வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்தது. அதன்படி இன்று காலை 6 மணிக்கு நாடு முழுவதும் தொடங்கிய லாரி ஸ்டிரைக் மாலை 6 மணி வரை நடக்கிறது.
இதில் தமிழகத்தில் உள்ள மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளனம், டிப்பர் லாரி உரிமையாளர்கள் சம்மேளனம், மாநில லாரி உரிமையாளர்கள் சங்கம் உள்பட பல அமைப்புகள் ஆதரவு தெரிவித்துள்ளது.
இதனால் தமிழகத்தில் உள்ள 4.5 லட்சம் லாரிகள் உள்பட நாடு முழுவதும் உள்ள 40 லட்சத்திற்கும் அதிகமான லாரிகளில் பெரும்பாலான லாரிகள் ஓடவில்லை. இதனால் நாமக்கல்லில் லாரிகள் உரிமையாளர் சங்க வளாகத்திலும், சேலத்தில் லாரி மார்க்கெட்டிலும், சரக்கு ஏற்றப்பட்ட லாரிகள் சாலையோரம் ஆங்காங்கே நிறுத்தி வைக்கப்பட்டிருந்ததை பார்க்க முடிந்தது.
மேலும் தமிழகத்தில் இருந்து வெளி மாநிலங்களுக்கு ஏற்றுமதி செய்யப்படும் ஜவுளி, மஞ்சள், இரும்பு கம்பிகள், ஜவ்வரிசி, காய்கறிகள் தேக்கம் அடைந்தது. இதே போல வட மாநிலங்களில் இருந்து தமிழகத்திற்கு வரும் பருப்பு, பூண்டு, வெங்காயம், தானிய வகைகள், மார்பிள் மற்றும் கிராணைட் கற்கள் வரத்து பாதிக்கப்பட்டது.