அன்னூர் அருகே உள்ள பிள்ளையார் பாளையம் ஊராட்சி ஆதிதிராவிடர் காலனியை சேர்ந்தவர் சின்னான் வயது (52) இவருடைய மனைவி ராதாமணி (47), இவர்களுக்கு ஒரு மகன், மகள் உள்ளனர்.அவர்களுக்கு திருமணம் ஆகிவிட்டது. சின்னான் தனது மனைவியுடன் அங்குள்ள தொகுப்பு வீட்டில் வசித்து வந்தார்.
இந்த நிலையில் அன்னூர் பகுதிகளில் கடந்த 3 நாட்களாக பரவலாக மழை பெய்தது. ஏற்கனவே சின்னான்வீடு பழுதடைந்த நிலையில் தான் இருந்தது. இந்த நிலையில் தற்போது பெய்த மழை காரணமாக வீட்டின் மேற்கூரை பழுதடைந்துள்ளது.
எனவே அதை சரி செய்யும் பணியில் தனது உறவினரான மகேந்திரன் (45) என்பவருடன் சின்னான் வேலையில் ஈடுபட்டார். அப்போது வீட்டின் மேற்கூரை திடீரென சரிந்து விழுந்தது. இந்த இடிபாடுகளுக்குள் சின்னான் சம்பவ இடத்திலேயே சிக்கி பலியானார். மகேந்திரன் சிறு காயங்களுடன் உயிர் தப்பினார்.
அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக மேட்டுப்பாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து தகவலறிந்த அன்னூர் போலீசார் மற்றும் கிராம நிர்வாக அதிகாரி காளிமுத்து மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள்.













