தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக மக்கள் போராட்டம் கடந்த ஆண்டு (2018) கிளர்ந்து எழுந்தது. கடந்த ஆண்டு மே மாதம் 22-ந் தேதி போராட்டம் தீவிரமான நிலையில், போராட்டக்காரர்களை நோக்கி போலீசார் துப்பாக்கி சூடு நடத்தினர். இதில் 13 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
இந்த சம்பவம் நாடு முழுவதும் கடும் அதிர்வலையையும், பெரும் பரபரப்பையும் ஏற்படுத்தியது. இதுதொடர்பாக விசாரணை நடத்துவதற்காக ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில், ஒரு நபர் விசாரணை ஆணையத்தை தமிழக அரசு நியமித்து உத்தரவு பிறப்பித்தது.
ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் இந்த சம்பவம் குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள், துப்பாக்கி சூட்டில் பலியானவர்களின் குடும்பத்தினர், காயம் அடைந்தவர்கள் மற்றும் அவர்களுடைய குடும்பத்தினரிடம் விசாரணை நடத்தி வருகிறார்.
இந்நிலையில், தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் 428 பேரின் மீதான வழக்கை திரும்ப பெற வேண்டும் என்றும், தமிழக அரசுக்கு ஒரு நபர் ஆணையம் பரிந்துரை செய்துள்ளதாக தகவல் தெரிவிக்கின்றது. கைது செய்யப்பட்ட நபர்களில் 80 சதவீதம் பேர் 18 வயதிலிருந்து 30 வயதிற்கு உட்பட்டவர்கள் என்றும், எதிர்காலம் பாதிக்கப்படும் என்பதால் நல்லெண்ண அடிப்படையில் வழக்குகளை வாபஸ் பெற வேண்டும் என தமிழக அரசுக்கு ஒரு நபர் ஆணையம் பரிந்துரையில் கூறப்பட்டுள்ளதாக தெரிகிறது.














