கோவை சிங்காநல்லூர் அடுத்த நீலிகோணம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் ஜோஸ். இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஜெயா நகர் பகுதி வழியாக தனது மனைவியுடன் சென்று கொண்டிருந்தார் .அப்போது அப்பகுதியில் நின்றுக்கொண்டு இருந்த மோகித் பிரசாத் (20) என்பவர் ஜோஸ் மனைவியை கேலி செய்ததாக கூறப்படுகிறது.
இதை ஜோஸ் தனது நண்பர்களிடம் கூறி ஆதங்கப்பட்டார். இதையடுத்து ஜோஸ் மற்றும் அவரது நண்பர்கள் மோகித் பிரசாத்திற்கு சரியான தண்டனை கொடுக்க வேண்டும் என முடிவு செய்தனர். மோகித்தை சந்தித்து ஜோஸ் மனைவியை கிண்டல் செய்தது குறித்து கேட்டனர் .
இதையடுத்து இரு தரப்பினரிடையே தகராறு எழுந்தது .தகராறு முற்றிய நிலையில் ஜோஸ் மற்றும் அவரது நண்பர்கள் தாங்கள் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து மோகித் பிரசாத்தின் தலையில் குத்தினர். மோகித் படுகாயத்துடன் விழுந்ததை அடுத்து ஜோஸ் மற்றும் அவரது நண்பர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றனர். மோகித்தை அருகில் உள்ளவர்கள் மீட்டு கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
இதுகுறித்து தகவலறிந்த சிங்காநல்லூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். தொடர்ந்து சம்பவத்தில் தொடர்புடைய மோகன் (21) மகேஷ்குமார் (18) மற்றும் இரண்டு சிறுவர்கள் உட்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர் .மேலும் தலைமறைவாக உள்ள ஜோஸ், வசந்த் ஆகியோரை போலீசார் தேடி வருகின்றனர்.