நெல்லை மாவட்டத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள ஆவின் பார்லர்கள் மற்றும் ஆவின் உற்பத்தி நிலையத்தை ஆய்வு மேற்கொள்ள பால்வளத்துறை அமைச்சர் சா.மு நாசர் நெல்லை வந்தார்.
பாளையங்கோட்டை நீதிமன்றம் எதிரே உள்ள ஆவின் பார்லர், டவுண் நெல்லையப்பர்கோவில் அருகே உள்ள ஆவின் பார்லர் மற்றும் மேலப்பாளையம் , அரசு பொறியியல் கல்லூரி ஆகிய பகுதிகளில் அமைந்துள்ள பார்லர்களையும் ஆய்வு செய்தார் . அங்கு விற்பனை விபரம் , வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படும் விலை ஆகியவற்றை முகவர்களிடம் கேட்டறிந்தார் . பின்னர் ரெட்டியார் பட்டியில் உள்ள ஆவின் உற்பத்தி நிலையம் பால் பாக்கெட்டுகள் தயார் செய்யும் இடம் மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் தயார் செய்யும் இடங்கள் ஆகியவற்றையும் நேரில் பார்வையிட்டார்
தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், ‘ஊரடங்கு காலத்தில் மிகவும் அத்தியாவசிய தேவையான பால் உற்பத்தி செய்யும் உற்பத்தியாளர்களிடமிருந்து சரியான முறையில் பெறப்பட்டு , பொதுமக்களுக்கு விற்பனை செய்வது குறித்து தமிழகம் முழுவதும் ஆய்வு பணிகள் நடந்து வருகிறது.

ஆவின் நிறுவனம் தற்போது லாபகரமாக இயங்கி வருகிறது. ஆவின் பால் லிட்டருக்கு ரூபாய் மூன்று விலை குறைக்கப்பட்டதால் 270 கோடி ரூபாய் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது அந்த இழப்பை சரி செய்யும் விதமாக உற்பத்தியை கூட்ட திட்டமிட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது .ஆவின் பால் விற்பனை கடந்த ஆட்சியில் 36 லட்சம் லிட்டராக இருந்தது, தற்போது நாளொன்றுக்கு 3 லட்சம் கூடுதலாக விற்பனை செய்யப்பட்டு 39 லட்சமாக விற்பனை உயர்ந்துள்ளது . மேலும் ஆவின் நிறுவன வருவாயை அதிகரிக்க கடந்த 10 ஆண்டுகாலத்திற்கு முன்பு திமுக ஆட்சியில் கிழக்கு மற்றும் மேற்கு ஆசிய நாடுகளுக்கு ஆவின் பொருட்கள் ஏற்றுமதி செய்யப்பட்டது. இது அதிமுக ஆட்சியில் நிறுத்தப்பட்ட நிலையில் , மீண்டும் கிழக்கு மற்றும் மேற்கு ஆசிய நாடுகளுக்கு ஆவின் மதிப்புக் கூட்டப்பட்ட பொருட்களை ஏற்றுமதி செய்து வருவாயை உயர்த்த திட்டமிட்டுள்ளோம்’ என்றார்.
நிகழ்ச்சியில் பல்வளத்துறை ஆணையர் நந்தகோபால் , மாவட்ட ஆட்சியர் விஷ்ணு , சட்டமன்ற உறுப்பினர்கள் அப்துல்வகாப் , ரூபிமனோகரன் , முன்னாள் சட்டப்பேரவைத் தலைவர் ஆவுடையப்பன் , தென்காசி தெற்கு மாவட்ட செயலாளர் சிவபத்மநாதன் , வடக்கு மாவட்ட செயலாளர் செல்லத்துரை , மற்றும் ஆவின் நிறுவன பொதுமேலாளர் நாகராஜன் , ஆகியோர் கலந்து கொண்டனர்