சென்னையில் ஒரே நாளில் இரு வெவ்வேறு போக்சோ வழக்குகளில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் இருவரை கிண்டி அனைத்து மகளிர் காவல் துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
சென்னை கண்ணகி நகரில் 14 வயதுடைய சிறுமி காணாமல் போனதாக பதிவு செய்யப்பட்ட வழக்கில், கண்ணகி நகர் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டதில் அதே பகுதியில் வசித்து வரும் மோகன்ராஜ் (எ) ராககுட்டி (22) சிறுமியை மாமல்லபுரம் அழைத்துச் சென்றது தெரியவந்தது.
இதனையடுத்து மோகன் ராஜை மாமல்லபுரம் சென்று போலீசார் கைது செய்து விசாரணை செய்தனர். விசாரணையில் அந்த நபர் சிறுமியை காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறி மகாபலிபுரம் அழைத்துச் சென்ற மோகன்ராஜ் அச்சிறுமியுடன் பாலியல் உறவில் ஈடுபட்டது தெரிய வந்தது.
இதனையடுத்து அச்சிறுமியை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்த போலீசார் மோகன் ராஜ் (எ) ராக்குட்டி என்பவரை கிண்டி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இதனையடுத்து 14 வயது சிறுமியை ஆசை வார்த்தைக் கூறி பாலியல் உறவில் ஈடுபட்ட குற்றத்திற்காக மோகன்ராஜ் போக்சோ சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டார்.
அதேபோல சோழிங்கநல்லூர் பகுதியில் வசித்து வரும் ஒப்பந்த ஊழியரின் 16 வயது மகள் வீட்டில் தனியாக இருந்துள்ளார். அப்போது அச்சிறுமியின் தாயரைக் காண அவர்களின் வீட்டிற்கு வந்த தஞ்சாவூரைச் சேர்ந்த கனகராஜன்(31) என்பவர் வீட்டில் யாரும் இல்லாததை தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்டு வீட்டில் தனியாக இருந்த சிறுமியிடம் பாலியல் ரீதியிலான அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார்.

இது குறித்து அச்சிறுமி அவரின் தாயாரிடம் கூற, சிறுமியின் தாயார் இச்சம்பவம் தொடர்பாக கிண்டி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் கனகராஜன் மீது போக்சோ சட்டத்த்கின் கீழ் வழக்குப் பதிவு செய்த போலீசார் கனகராஜனை தீவிரமாக தேடி வந்தனர். இந்நிலையில் கனகராஜன் தனது சொந்த ஊரான தஞ்சாவூரில் பதுங்கியிருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் அங்குச் சென்ற போலீசார் கனகராஜனை கைது செய்து நீதிமன்றத்தி ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.














