பஞ்சாப் குர்டாஸ்பூரில் இருக்கும் பட்டாசு தயாரிக்கும் தொழிற்சாலையில் இன்று மிகப் பெரும் வெடி விபத்து ஏற்பட்டது.
இந்த விபத்தில் சிக்கி 19 பேர் உயிரிழந்ததாக முதலில் தகவல் வெளியான நிலையில், தற்போது பலி எண்ணிக்கை 23 ஆக அதிகரித்துள்ளது. மேலும் பலர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வருகிறார்கள்.
இந்த விபத்தினால், பட்டாசு தொழிற்சாலை முழுவதுமாக பாதிக்கப்பட்டுள்ளது என்றும் அருகிலிருந்த கட்டிடங்கள் பலத்த சேதங்களுக்கு உள்ளாகி இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
பட்டாசு தொழிற்சாலை விபத்தில் சிக்கி உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் இரங்கல் தெரிவித்தார். இந்த விபத்து குறித்து பஞ்சாப் முதல்-மந்திரி அமரிந்தர் சிங், “பட்டாசு தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடி விபத்தின் காரணமாக ஏற்பட்ட உயிர் இழப்பு ஆழ்ந்த வேதனை அளிக்கிறது. நிவாரண முயற்சிகளும், மீட்பு நடவடிக்கைகளும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன” என்று தெரிவித்தார்.
இதனிடையே வெடி விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ. 2 லட்சம் நிதி வழங்கவும், படுகாயமடைந்தவர்களுக்கு ரூ. 50,000 மற்றும் லேசான காயமடைந்தவர்களுக்கு ரூ. 25,000 நிதி வழங்கவும் பஞ்சாப் முதல்-மந்திரி அமரிந்தர் சிங் உத்தரவிட்டார்.











