கொரோனா தடுப்பு நடவடிக்கைகளாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட நிலையில் கடந்த 8ஆம் தேதி முதல் சில தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளன. ஆனாலும், ஐவுளி கடைகள் உள்ளிட்ட நிறுவனங்கள் செயல்பட தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந் நிலையில் தடையை மீறி மதுரை மாநகரில் உள்ள மாசி விதிகள் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஜவுளி நிறுவனங்களில் விற்பனை நடைபெற்றுவருகிறது. ஜவுளிகடைகளில் பின்புறம் வழியாக வாடிக்கையாளர்கள் அனுமதிக்கப்படுகின்றனர்.
ஒவ்வொரு ஜவுளிகடைகளிலும் 5 தளங்கள் வரை திறக்கப்பட்டு விற்பனை நடைபெறுகிறது. இந்த ஜவுளிகடைகளில் விற்பனையின் போது விற்பனையாளர்களும், வாடிக்கையாளர்களும் முக கவசம் அணியாமல் சமூக இடைவெளியின்றி குவிந்துள்ளனர்.
கடைகளில் செயல்படகூடிய லிப்டுகளில் சமூக இடைவெளியின்றி 10க்கும் மேற்பட்டோர் செல்லக்கூடிய நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் குழந்தைகளுக்கான பிரிவில் ஏராளமான குழந்தைகளையும் அனுமதித்துவருகின்றனர். இதனால் குழந்தைகளுக்கும் கொரோனா தொற்று ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளது.

சில நகைகடைகளும் விதிகளை மீறி இயங்கின. இது குறித்து மாவட்ட ஆட்சியரிடம் விளக்கம் கேட்டபோது ’ஊரடங்கு விதிகளை மீறி திறக்கப்படும் ஜவுளிகடை , நகைக்கடை நிறுவனங்கள் மீது நடவடிக்கைகள் எடுக்கப்படும்’ என தெரிவித்தார்.
மதுரையில் தொற்று எண்ணிக்கை குறைந்துவரும் சூழலில் ஜவுளிகடைகளில் மக்கள் கூட்டம் கூட்டமாக கூடுவதால் கொரோனா மீண்டும் அதிகரிக்கும் நிலை உருவாகும், எனவே, மாவட்ட நிர்வாகம் வெறும் சொல்லோடு நிற்காமல் இதனை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.














