காவிரி டெல்டா பகுதியை பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண்மண்டலமாக அறிவித்தது முந்தைய தமிழ்நாடு அரசு. ஆனால், எப்படியாவது அப்பரப்பிலிருக்கும் எரி எண்ணெய், வாயுவை ஒட்ட உறிஞ்ச கார்பரேட்டுகள், பன்னாட்டு நிறுவனத்தினர் கனவு கண்டனர். இந்திய ஒன்றிய அரசும் அதற்கு ஆதரவாக இருந்தது.
சிறப்பு மண்டலமாக டெல்டா அறிவிக்கப்பட்டபோது அரியலூருக்கு விலக்கு அளிக்குமாறு ஒரு கோரிக்கை எழுந்தது. எனவே அது நிர்கதியாக விடப்பட்டது. அதாவது, டெல்டா பூமியில் ஓரிரு மாவட்டத்திலாவது கனிமக் கொள்ளையைநடத்த அனுமதித்தாக வேண்டுமென்ற வலியுறுத்தல்.
இப்போது புதுக்கோட்டை மாவட்டத்தில் கரிம வாயு ஆய்வுக்கு அனுமதி அளிக்கப்போவதாக பேச்சு எழுந்தது. அப்படியே போக்கு காட்டி அரியலூர் மாவட்டத்தை குறி வைத்துள்ளது ஒன்றிய அரசு. அதாவது ,அரியலூர் மாவட்டத்தில் உள்ள உடையார்பாளையம் பகுதியில் ஓஎன்ஜிசி நிறுவனம் 10 ஹைட்ரோ கார்பன் எடுப்பதற்கு அனுமதி கோரி மாநில அரசுக்கு விண்ணப்பித்துள்ளது.

இந்த சுற்றுச்சூழல் அனுமதி கடிதத்துக்கு மாநில சுற்றுச்சூழல் ஆணையம் பதிலளிக்க வேண்டும். அந்த மனுவில், ‘ கருத்து கேட்பு கூட்டத்துக்கு அவகாசம் இல்லாததால் அனுமதி வழங்கவேண்டும்’ என்று சாதுர்யமாக ஓஎன்ஜிசி கேட்டுள்ளது. ஆனால், அப்படி ஏதும் நெருக்கடி இல்லை. மக்களிடம் செல்லாமல், சொல்லாமல் காரியம் சாதிக்க நினைக்கும் ஓஎன்ஜிசி முடிவை மாநில அரசு நிராகரிக்கவேண்டும். இதுகுறித்து நாளை டெல்லியில் பிரதமரை சந்திக்கும் முதல்வர் முக ஸ்டாலின் வலியுறுத்தவேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.













