கிருஷ்ணகிரி மாவட்டம் பருகூர் பகுதியை சேர்ந்த சின்னபாப்பா(60) என்பவர் கடந்த 3 தினங்களுக்கு முன் நிமோனியா நோயால் பாதிக்கப்பட்டு அடுக்கம்பாறையில் உள்ள வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிநேகிதி சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் இன்று காலை 6.50 மணிக்கு சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்துள்ளார்.
இந்நிலையில் உடலை சொந்த ஊர் கொண்டு செல்ல உறவினர்கள் அரசு அமரர் ஊர்தியை பதிவு செய்த நிலையில் 8 மணி நேரம் ஆகியும் அமர் ஊர்தி வராததில் அவதிப்பட்டுள்ளனர்.
மேலும் வார்டில் இறந்து கிடந்த சின்னபாப்பாவை சுமார் 7 மணி நேரத்திற்க்கு மேலாக அகற்றாமல் வார்டியேலே விட்டுள்ளனர். உறவினர்கள் மற்றும் வார்டில் உள்ள நோயாளிகள் எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து 7 மணி நேரம் கழித்து சின்னபாப்பாவின் உடல் பிரேதபரிசோதனை அறைக்கு மாற்றியுள்ளதாக உறவினர்கள் குற்றச்சாட்டினர்.
மேலும் பருகூர் வரை ஒரே உடலை எடுத்த செல்ல முடியாது இன்னோரு உடல் இருந்தால் தான் பருகூர் வர முடியும் அதுவரை வரமுடியாது என அமரர் ஊர்தி ஓட்டுனரும், நிர்வாகத்தினரும் அலட்சியமாக பதில் கூறுவதாகவும், காலை முதல் தங்களை அலைக்கழி த்ததாகவும் உறவினர்கள் குற்றச்சாட்டினர்.
இதனையடுத்து நீண்ட நேர போராட்டத்திற்க்கு பிறகு சுமார் 8 மணி நேரத்திற்கு பின்னர் அரசு அமரர் ஊர்தி வரவழைக்கப்பட்டு உடல் பருகூர் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.
இது குறித்து அரசு
அமரர் ஊர்திகள் பொறுப்பாளர் வெங்கடேஷை தொடர்பு கொண்டு கேட்டது, ‘அதிக இறப்பு காரணமாக அமரர் ஊர்தி வாகனங்கள் வெளியில் சென்றுள்ளதால் தாமதம் ஏற்பட்டுள்ளது. போதிய வாகனம் இல்லாதாலும் தாமதம் ஏற்பட்டுள்ளது. மேலும் வாகன பற்றாக்குறையால் அதிக தூரம் ஒரே உடலை கொண்டு செல்லும் போது வழியில் மற்றோரு உடலையும் கொண்டு செல்வது தாங்கள் கடைபிடிக்கும் சாதாரண நடைமுறை தான் ‘என்றும் விளக்கம் கூறினார்.













