நெல்லை மாவட்டம் புளியங்குடி பஸ் நிலையத்திலிருந்து மேற்கில் சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது ஸ்ரீலட்சுமி நரசிம்மர் கோவில். ஆந்திர மாநிலம் அகோபிலத்தில் உக்கிர நரசிம்மராக அவதாரம் எடுத்த மஹா விஷ்ணு ,உக்கிரம் தணிந்து சாந்தமானது புளியங்குடியில் தான்.
இந்த பெருமாளை சிவன்,பிரம்மா,தேவாதி தேவர்கள் தரிசனம் செய்துள்ளனர். இவர்களுக்கு தரிசனம் தந்த அதே சொரூபத்தில் இங்கு லட்சுமி நரசிம்மராக எழுந்தருளியுள்ளார் மஹாவிஷ்ணு. எல்லா ஆலயங்களிலும் மேற்கு நோக்கி எழுந்த ருளும் நரசிம்மர் இங்கு கிழக்கு நோக்கி எழுந்தருளியுள்ளார். எதிரி தொல்லை,குன்ம நோய், தொழில் ,வியாபார நஷ்டம்,மனபயம் போன்றவற்றால் அவதிப்படுபவர்கள் இங்குள்ள லட்சுமி நரசிம்மரை வழிபட்டால் ‘நாளை என்பதில்லை நரசிம்மனிடத்தில்‘ என்ற இறை வாக்கிற்கிணங்க கைமேல் பலன் நிச்சயமாக உண்டு என்கின்றனர். இங்கு பக்தர்களுக்கு தித்திப்பான தீர்த்தம் வழங்குவது சிறப்பம்சமாகும்.
அகோபிலத்துக்கு நிகரான புராணப் பெருமை கொண்ட இக்கோவிலில் சுவாதி பூஜை வெகுசிறப்பாக நடைபெற்று வருகிறது .ஐப்பசி மாத சுவாதி பூஜை நேற்று நடைபெற்றது. முன்னதாக மாலை 04 :00 மணிக்கு மங்கள இசை 04:15 மணிக்கு கும்ப பூஜை ,ஹோமம் , 05:30 மணிக்கு அபிஷேகம் , 07 :00 மணிக்கு தீபா ராதனை உற்சவமூர்த்தி திருக்கோவில் வலம் வருதல் ஆகிய வைபவங்களும் நடை பெற்றன. தொடர்ந்து மலர்களால் அலங்கரிக்கப் பட்ட பல்லக்கில் நரசிம்மர் பூதேவி-ஸ்ரீதேவி யுடன் கோவில் சுற்றுப்பிரகாரம் வழியாக வீதிஉலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். தொடர்ந்து சிறப்பு தீபாரதனைகள் நடந்தது. இந்த சிறப்பு அபிஷேக ஆராதனையில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். பின்னர் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை அறநிலையத்துறை நிர்வாக அதிகாரி ,அர்ச்சகர் மீனாட்சிசுந்தரம் (எ) அய்யப்பன், பணியாளர் மற்றும் ஊர் பொதுமக்களும் செய்திருந்தனர்.















