மதிமுக பொதுச்செயலாளர் வைகோ எம்பி ரமலான் ஈகைத்திருநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:-
உலகியல்,சமயம் என இரண்டு நிலைகளிலும், மகத்தான வெற்றியை, ஒருசேரப் பெற்றவர் அண்ணலார் முகமது நபி (ஸல்)ஆவார்கள்.
ஒன்றே குலம்…ஒருவன் மட்டுமே இறைவன் என அறிவித்து, இஸ்லாம் மார்க்கத்தை நிலை நிறுத்தினார். அவரது அரிய உழைப்பினால், அவரது பொன்மொழிகளால், உலக மக்கள் தொகையில், கிறித்துவத்திறகு அடுத்த நிலையில் இன்று இஸ்லாம் இருக்கின்றது.
கலிமா, தொழுகை, நோன்பு, ஜக்காத் (கொடை), ஹஜ் புனிதப் பயணம் என்ற இந்த ஐம்பெருங் கடமைகளுள் ஒன்றான நோன்பினை, இஸ்லாமியக் கணக்கின் ஒன்பதாவது மாதமான ரமலானில் தோன்றும் பிறையைப் பார்த்துத் தொட ங்கி, பத்தாவது மாதமான ஸவ்வால் மாதப் பிறையைப் பார்த்து நோன்பை நிறைவு செய்கின்றார்கள்.
ரமலானின் ஒவ்வொரு நாளிலும் மகத்தான யுத்தங்கள், மாபெரும் வெற்றி நிறைந்த சரித்திரங்கள், பெருமை மிக்க வேதங்கள் பல இறங்கியதும், பெருமானார் (ஸல்) பங்கேற்ற பத்ருப் போர் வரை, ஏராளமான படிப்பினைகளும் உண்டு.
புனித மாதம் விடைபெற்றுச் செல்லும் வேளையில், கொரோனா எனும் கொடிய நோயின் பிடியில் இருந்தும், அச்சத்தில் இருந்தும், உலக மக்கள் விடுதலை பெறவும், நலமாகவும், மன நிறைவுடனும் வாழ்ந்திடவும் இதயமார வேண்டி, இனிய ஈத் பெருமான் ஈகைத் திருநாள் வாழ்த்துகளை, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் தெரிவித்துக் கொள்கின்றேன். இவ்வாறு வாழ்த்து செய்தியில் தெரிவித்துள்ளார்.













