கடந்த ஆகஸ்ட் 11ல் கடையம் அருகே உள்ள கல்யாணிபுரத்தை சேர்ந்த முதிய தம்பதிகளான சண்முகவேல் & செந்தாமரை ஆகியோரை நள்ளிரவில் தாக்கி கொள்ளையடிக்க வந்த கும்பலை இருவரும் சேர்ந்து விரட்டியடித்து தமிழகத்தின் வீர தம்பதிகளாகினர். அடுத்த சில நாட்களில் வந்த சுதந்திர தினத்தில் அரசு சார்பில் அவர்களுக்கு பதக்கமும் வழங்கப்பட்டது.
ஆனால், அந்த வழக்கு கிடப்பில் கிடந்தது. சிசிடிவி காட்சிகள் இருந்தும் குற்றவாளிகளை கண்டுபிடிக்க போலீஸ் திணறியது. தற்போது அந்த வழக்கில் பாலமுருகன் (30), பெருமாள் (51) ஆகிய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். பாலமுருகன் கீழ கடையத்தை சேர்ந்தவர். பெருமாள் சவலப்பேரியை சேர்ந்தவர்.
இருவரும் இரு நாட்களாக வீட்டை பார்வையிட்டு திருட்டில் ஈடுபட்டு செந்தாமரையின் 35 கிராம் தாலி சங்கிலியை பறித்துச்சென்றுள்ளனர். திரும்பும் வழியில் ஒரு பீடி சுற்றும் தொழிலாளியிடம் வழிப்பறியில் ஈடுபட்டுள்ளனர்.
பாலமுருகன் மீது 38 வழக்குகளும், பெருமாள் மீது 8 வழக்குகளும் உள்ளன.









