கொரோனா பாதிப்பு தொடங்கி பரவிய சூழலில் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ஜூன் மாதம் 1ஆம் தேதி முதல் 12ஆம் தேதி வரை நடைபெறும் என தமிழக அரசு அறிவித்தது.
இதற்கு கடுமையான எதிர்ப்புகள் கிளம்பியதையடுத்து, ஜூன் 15ஆம் தேதி முதல் ஜூன் 25ஆம் தேதி வரை 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நடத்தப்படும் எனவும், 11ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ஜூன் 16ஆம் தேதியும், விடுபட்டவர்களுக்கான 12ஆம் வகுப்பு மறுதேர்வு ஜூன் 18ஆம் தேதியும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வந்தது.
இதனிடையே, தமிழகத்தில் 10ஆம் வகுப்பு தேர்வை இரண்டு மாதங்களுக்கு ஒத்திவைக்க கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆசிரியர் சங்கம் வழக்கு தொடர்ந்து. இந்த வழக்கு விசாரணையில் ‘9 லட்சம் மாணவர்களின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்த அனுமதிக்க முடியாது. பொதுத் தேர்வை தள்ளிவைக்கும் முடிவை அரசே எடுத்தால் நன்றாக இருக்கும்’ என நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.
ஜூலை வரை பள்ளி திறக்க முடியாது என அறிவித்த தமிழக அரசு அந்த காலகட்டத்துக்குள் தேர்வை மட்டும் வைக்க முயல்வதேன்? என கல்வியாளர்களும் ஆட்சேபம் தெரிவித்தனர்.
3650 பேர் பாதிக்கப்பட்ட தெலங்கானாவிலேயே தேர்வு ஒத்திவைக்கப்பட்ட நிலையில் 33,299 பேர் பாதிக்கப்பட்டுள்ள தமிழ்நாட்டில் தேர்வை நடத்துவது சரியா என எதிர்க்கட்சி தலைவர் கேட்கும் கேள்வி எடுபடும் நிலையில் உள்ளது.
நாளை தேர்வு குறித்து முதல்வர் ஆய்வு மேற்கொள்ளவிருப்பதாக கூறப்படும் நிலையில் தேர்வு நிச்சயம் ஒத்திவைக்கப்படும் என்பதே உறுதியாக தெரிகிறது.












