கோவை தடாகம் சாலையில் உள்ள முத்தண்ணன் குளத்தில் சுமார் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆக்கிரமிப்பு வீடுகள் இருந்தன . ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் முத்தண்னன் குளத்தில் பல்வேறு திட்டப் பணிகள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதனிடையே அக்குளக்கரையில் வசிக்கும் மக்களுக்கு மலுமிச்சம்பட்டி, கீரணத்தம், காபி கடை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள அரசு அடுக்குமாடி குடியிருப்புகளில் குடிசை மாற்று வாரியத்தால் வீடுகள் ஒதுக்கப்பட்டு டோக்கன் வழக்கப்பட்டு அவர்கள் அந்த குடியிருப்பில் குடியேறி வருகின்றனர்.
இதில் சில மாதங்களுக்கு முன்பு சுமார் 1600 பேர் தங்கள் வீடுகளை காலி செய்துவிட்டு அரசு அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு சென்றுவிட்டனர். அவர்களது வீடுகள் முதல் கட்டமாக இடிக்கப்பட்டன. அதன்பின் தற்போது அங்கு காலியாக உள்ள வீடுகளை ஜே.சி.பி. உதவியுடன் இடிக்கும் பணிகளை மாநகராட்சி அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர். இதனிடையே அப்பகுதியில் பழமை வாய்ந்த முத்துமாரியம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலை இடிக்க உள்ளதாக நேற்று தகவல் பரவியது.
இதையடுத்து கோயிலை இடிக்க எதிர்ப்பு தெரிவித்து முத்தண்ணன் குளம் சுண்டப்பாளையம் சாலை சிவராம் நகரில் பொதுமக்கள் கோயில் முன் அமர்ந்து நேற்று தர்ணாவில் ஈடுபட்டனர். பின்னர் போலீசார் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதை அடுத்து கலைந்து சென்றனர்.
இந்நிலையில் இன்று அதிகாலை மாநகராட்சி அதிகாரிகள் முத்துமாரியம்மன் கோவிலை இடிக்கும் பணிகளை துவக்கினர்.இதற்காக ஏராளமான போலீசார் அங்கு குவிக்கப்பட்டு இருந்தனர். இந்த தகவலை அறிந்த அப்பகுதி பொதுமக்கள் ஏராளமானோர் அங்கு குவிந்தனர்.இதேபோல இந்து முன்னணியின் மாவட்ட தலைவர் கே.தசரதன் தலைமையில் 200க்கும் மேற்பட்டோர் குவிந்தனர். போலீசார் அனைவரையும் கலைந்து போகுமாறு கூறி னர்.ஆனாலும் இந்து முன்னணியினர் தொடர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.
இதையடுத்து மாவட்ட தலைவர் கே.தசரதன்,கோட்ட செயலாளர் சதிஷ், கோட்ட பேச்சாளர் ஆ.கிருஷ்ணன்,மாவட்ட பொது செயலாளர் ஜெய்சங்கர்.மாவட்ட செயலாளர் மகேஷ்வரன்.மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஜெயபால். ,மாவட்டசெய்தி தொடர்பாளர் சி.தனபால்.மாவட்ட செயலாளர்கள் ஆறுச்சாமி,மகேஷ்வரன்,ஆனந்த் உள்ளிட்ட 200 க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.
இது குறித்து மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறுகையில், முத்தண்ணன் குளக்கரை பகுதியில் 3 கோயில்கள் உள்ளன. ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகளுக்காக இந்த கோயில்கள் இடிக்கப்பட உள்ளன என்றார்.