தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே உள்ள நடுவக்குறிச்சி பஞ்சாயத்தில் தெற்கு ராமசாமிபுரம் என்ற கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் இந்த பகுதியில் இருந்து தட்டார்மடம் வரை செல்லும் இணைப்பு சாலையானது சேதமான நிலையில் காணப்படுகிறது.
இதனால் அந்தப் பகுதியைச் சேர்ந்த கிராம மக்கள் புதிய சாலை அமைப்பது குறித்து துறை அதிகாரிகளுக்கு பல்வேறு முறை மனு அளித்துள்ளனர். அதற்கு பலன் இன்றி போகவே, இது தொடர்பாக தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் தகவலை கேட்டுள்ளனர். அப்போது கிடைக்கப்பெற்ற தகவலில் அந்த சாலையானது புதிதாகப் போடுவதற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது என ஒரு தகவல் கிடைத்துள்ளது.
மேலும், அதே தகவலின் மற்றொரு புறத்தில் அதே சாலை 18.67 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் போடப்பட்டதாகவும் ஒரு தகவல் கூறப்பட்டுள்ளது. இவ்வாறு போடாத சாலைக்கு பணம் ஒதுக்கப்பட்டுள்ளதாக வந்த தகவலால் மக்கள் மிகுந்த அதிர்ச்சி அடைந்தனர்.
இதனால் ஆவேசம் அடைந்த கிராம மக்கள் ஏற்கனவே 18.67 லட்சம் மதிப்பீட்டில் போடப்பட்டதாக கூறப்படும் சாலையை கண்டுபிடித்து தருபவர்களுக்கு 18.67 லட்சம் ரூபாய் ரொக்க பணமும், ஒரு பவுன் தங்க மோதிரமும் பரிசாக வழங்கப்படும் எனக் கூறி அந்த பகுதி முழுவதும் நோட்டீஸ் அடித்து ஓட்டியுள்ளனர். இந்த சம்பவத்தால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.














