ஹரியானாவில் ஆட்சியமைப்பதற்கு 46 இடங்கள் தேவை என்ற நிலையில் பாஜக 40 இடங்களை வைத்துக்கொண்டு சொச்சத்துக்கு தேடலை தொடங்கியது.
ஹரியானா முன்னாள் முதல்வரும், ஊழல் வழக்கில் சிறைத் தண்டனை அனுபவித்து வருபவருமான ஓம் பிரகாஷ் சவுதாலாவின் பேரன் துஷ்யந்த் தனது ஜனநாயக் ஜனதா கட்சி சார்பிலான 10 எம்.எல்.ஏல்லளின் ஆதரவை குறைந்த பட்ச வேலைத்திட்டத்தோடு கொடுக்க முன்வந்தார்.
ஒற்றை, ஒற்றையாக சுயேட்சைகளை ஒப்பேற்றிக்கொண்டுவருவதை விட, ஒட்டுமொத்தமாக கிடைக்கும் 10 எம்.எல்.ஏக்கள் பலம் என்றாலும், நிபந்தனையே இல்லாமல் இணையவந்த சுயேட்சைகளை முதலில் சேர்த்துக்கொண்டது பாஜக.
இதை எதிர்பாராதா துஷ்யந்த் எப்படியும் 5 ஆண்டுகளை செழிப்பாக ஓட்ட தேவை என்ற முறையில் பாஜகவோடு சேர்ந்துகொண்டார். அவருக்கு துணை முதல்வர் பதவி கூட கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது.
ஆனாலும், பெரும்பாலான இடங்களில் தங்களிடமே மோதி வென்ற எதிரி தனது தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றி செல்வாக்கை உருவாக்கிக்கொள்ள பாஜக இடம் கொடுக்காது என்றே தோன்றுகிறது.
ஆட்சி அமைக்கும்வரை இருக்கும் அன்பு ஐந்தாண்டு பந்தமாக மாறுமா எனத்தெரியவில்லை. அதுமட்டுமல்ல, ஜனநாயக் ஜனதா கட்சி இப்படி எதிரியுடன் சேர்ந்து ஆட்சி அமைப்பதை அவரது அதி தீவிர ஆதரவாளர்களும் பாஜக எதிர் மனநிலையில் வாக்களித்த மக்களும் ஏற்றுக்கொள்வார்களா என்று தெரியவில்லை. இந்த இணைப்பு எதிர்காலத்தில் வாக்கு வங்கியின் சேமிப்பை சரிக்கவே உதவும் என்பது அரசியல் நோக்கர்களின் கருத்தாக இருக்கிறது.
ஆக, ஒரு காலத்தில் துஷ்யந்தன் சகுந்தலையை மறந்தான். இப்போது அரசியல் ஆட்டம் போடும் சகுந்தலையான பாஜக துஷ்யந்தை மறந்துவிடும். அது அணிவிக்கும் பதவி மோதிரம் கூட அவருக்கு கைகொடுக்காது என்பதே நிதர்சனம்.