தூத்துக்குடி மாவட்டத்தில் திருச்செந்தூர் பகுதி குளங்களில் விவசாயிகளுக்குஅளிக்கப்படும் கரம்பை மண் அள்ளும் அனுமதியை தவறாக பயன்படுத்தி உடன்குடி அனல்மின் நிலைய பணிகளுக்கு மண் விற்பதாக தொடர்ந்து புகார் வந்தது.
சில நாட்களுக்கு முன்பு விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மண் லாரியை பிடித்துக்கொடுத்தும் காவல், வருவாய் அதிகாரிகள் விட்டுவிட்டதாகவும் குற்றஞ்சாட்டப்பட்டது.
இரவு, பகலாக நடக்கும் இந்த மண் கொள்ளையால் குளங்கள் சூறையாடப்பட்டு நிலத்தடி நீர் மட்டம் பாதிக்கப்படுவதோடு, போக்குவரத்து நெருக்கடியும் விபத்தும் கூட ஏற்படுகிறது.
இன்று அதிகாலை 3 மணி அளவில் திருச்செந்தூர் அருகே உள்ள நத்தமுடையார் குளத்தில் மண் அள்ளியபோது காணியாளன்புதூரை சேர்ந்த பாலசுந்தர் என்பவர் மேல் லாரியை ஏற்றியதில் சம்பவ இடத்திலே அவர் உயிரிழந்தார். இதனால் சோனகன்விளையில் பொதுமக்கள் சாலை மறியல் செய்தனர்.
காவல், வருவாய் துறை அதிகாரிகள் , மண் அள்ளியவர்களிடமிருந்து பாலசுந்தர் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் இழப்பீடு அளிக்கவும், அவரது சகோதரி படிப்பு செலவை ஏற்கவும் பேசி முடித்துள்ளனர்.







