தமிழ்நாடு முழுவதும் ‘வாழ்ந்துகாட்டுவோம்’ திட்டம் மூலம் வறுமை ஒழிப்பு திட்டத்தை செயல்படுத்தும் பணி நடக்கிறது. இந்த திட்டத்துக்கான வட்டார ஒருங்கிணைப்பாளர்களை அந்தந்த மாவட்ட மகளிர் திட்ட அலுவலர் மூலம் மாவட்ட நிர்வாகம் பணியமர்த்துகிறது.
தூத்துக்குடி மாவட்டத்தில் 12 வட்டாரங்களுக்கு 23 ஒருங்கிணைப்பாளர்களை ரூ.12 ஆயிரம் மாத ஊதியத்தில் பணியமர்த்த தேர்வு நடந்தது. ஐயாயிரம் ரூபாய்க்கு அடுப்பூதும் சத்துணவு சமையலர்கள் வேலைக்கே அடித்துப்பிடித்து ஆயிரம் பேர் கூடும்போது, அளவெடுத்து தைத்த சட்டைபோல் அடக்கமான எண்ணிக்கையில் தேர்வெழுத வந்தவர்களை பார்த்ததும் வியப்பு ஏற்பட்டது.
விசாரித்த பின்புதான் விளம்பரம் செய்து தேர்வுக்கு அழைக்கவேண்டியவர்கள், விவகாரமாக வெளிக்கு தெரியாமல் தேர்வை வைத்து வரும் 29ஆம்தேதி நேர்முகத்தேர்வு நடத்தி நியமன உத்தரவை அவசர, அசசரமாக வழங்கவிருக்கும் தாராளம் தெரியவந்தது. இதற்காக மகளிர் திட்ட அலுவலர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு தீபாவளி பரிசு கிடைத்துவிட்டதாம்.
கஷ்டப்பட்டவர்களுக்கான இந்த கடைநிலை வாய்ப்பை கையூட்டு வாங்கிக்கொண்டு கைநீட்டியவர்களுக்கு கொடுக்கும் கசவாளித்தனத்தை உடனடியாக கலெக்டர் உள்ளிட்ட உயரதிகாரிகள் தடைசெய்யவேண்டும். வெளிப்படையாக விளம்பரம் நடத்தி, நேர்மையாக தேர்வும் நேர்முகமும் நடத்தவேண்டும். ‘அரசுப்பணி _ கமுக்கம்’ என்பது பணி நியமனங்களுக்கல்ல’ என பாவப்பட்டவர்கள் பரிதாபமாக கூறுகின்றனர்.









