கோவை ஜவுளிக்கடை உரிமையாளர் ரஞ்சித். இவரது குழந்தைகள் முஸ்கான் (11), ரித்திக் (8). இருவரும், 2010, அக்டோபர் 29-ல் கடத்தப்பட்டனர். இதில், சிறுமி முஸ்கான் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாகக் கூறப்பட்டது. பின்னர், பொள்ளாச்சி அருகே உள்ள பி.ஏ.பி. பிரதான வாய்க்காலில் இருவரும் தள்ளிவிடப்பட்டு, கொலை செய்யப்பட்டனர். இந்த இரட்டைக் கொலை தொடர்பாக குழந்தைகளை வேனில் பள்ளிக்கு அழைத்துச் சென்ற ஓட்டுநரான பொள்ளாச்சி அங்கலக்குறிச்சியைச் சேர்ந்த மோகன கிருஷ்ணன், அதே பகுதியைச் சேர்ந்த அவரது கூட்டாளி மனோகரன் ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டனர்.
குழந்தைகளைக் கொலை செய்த இடத்தை அடையாளம் காட்டுவதற்காக மோகன கிருஷ்ணனை போலீசார் 2010, நவம்பர் 9-ல் வேனில் அழைத்துச் சென்றனர். அப்போது, கோவை செட்டிபாளையம் அருகே போலீஸ் காவலில் இருந்து தப்ப முயன்றதால், என்கவுன்ட்டரில் மோகன கிருஷ்ணன் சுட்டுக் கொல்லப்பட்டார். மனோகரன் சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்த வழக்கை விசாரித்த கோவை மகளிர் நீதிமன்றம், பள்ளிக் குழந்தைகள் கடத்திக் கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட மனோகரனுக்கு இரட்டை தூக்குத் தண்டனையும், மூன்று ஆயுள் தண்டனையும் விதித்து கடந்த 2012, நவம்பர் 1-இல் தீர்ப்பு அளித்தது. இதற்கு எதிராக மனோகரன் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை தள்ளுபடி செய்தது.
இதைத் தொடர்ந்து, உச்சநீதிமன்றத்தில் கடந்த 2014, செப்டம்பர் 20-இல் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கு தொடர்பான விசாரணை உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் கோவை பள்ளிக் குழந்தைகள் முஸ்கான், ரித்திக் கொலை வழக்கில் மனோகரனின் தூக்கு தண்டனைக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது. செப்டம்பர் 20ம் தேதி தண்டனை நிறைவேற்ற இருந்த நிலையில், உச்ச நீதிமன்றம் தூக்கு தண்டனைக்கு தடை விதித்துள்ளது. மனோகரனின் மறு ஆய்வு மனு மீதான விசாரணை அக்டோபர் 16ம் தேதிக்கு ஒத்திவைத்தது.















