பொதுமக்களுக்கு மானிய விலையில் வழங்கப்படும் பொருட்கள் கடத்தப்படுவதைத் தடுக்க குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறை போலீசார் கண்காணித்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
இந்நிலையில் சென்னை எழும்பூர் ரயில் நிலையத்திலிருந்து ஒடிசா மாநிலத்திற்கு ரேசன் அரிசி கடத்தப்படுவதாக தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் குடிமை பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு பிரிவு போலீசார் எழும்பூர் ரயில் நிலையத்திலுள்ள 5ஆவது நடைமேடையில் நின்றிருந்த ரயிலை சோதனை மேற்கொண்டபோது அதில் 1,000 கிலோ ரேசன் அரிசி மூட்டை மூட்டையாக கடத்திச் செல்ல தயார் நிலையில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இதனையடுத்து அரிசி மூட்டைகளை பறிமுதல் செய்த போலீசார் ரேஷன் அரிசியை கடத்திச் செல்ல முயன்ற நபர்களையும் தீவிரமாக தேடி வருகின்றனர். கடந்த 1ஆம் தேதி முதல் நேற்று வரை ரேசன் அரிசியை கடத்தியதாக 26 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 30 பேரை குடிமை பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறை போலீசார் கைது செய்துள்ளதாகவும், அவர்களிடமிருந்து 9,750 கிலோ ரேசன் அரிசியை பறிமுதல் செய்துள்ளதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக ரேசன் அரிசி கடத்திய குற்றத்திற்காக புளியந்தோப்பைச் சேர்ந்த பாலா என்பவர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.