பூமியின் வட துருவத்தையும், தென் துருவத்தையும் அடைந்த முதல் பாகிஸ்தான் பெண் என்ற பெருமையை பெற்றவர் நமீரா சலீம். எவரெஸ்ட் சிகரத்தில் ஸ்கை டைவ் செய்தும் சாதனை புரிந்தவர். அமெரிக்காவின் விர்ஜின் கேலக்டிக் நிறுவனத்தின் மூலம் விண்வெளிக்குச் செல்ல தகுதி பெற்றுள்ள அவர், இந்தியாவின் சந்திரயான்-2 திட்டத்தை புகழ்ந்துள்ளார்.
நிலவின் தென் துருவத்தில் மென்மையான தரை இறக்கத்தை கையாள முயன்றது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது என்றும் அதற்காக இந்தியாவுக்கும், இஸ்ரோவுக்கும் வாழ்த்து கூறிக் கொள்வதாகவும் தெரிவித்துள்ளார்.
சந்திரயான்-2 நிலவுத் திட்டமானது, தெற்காசியாவின் மிகப்பெரிய பாய்ச்சல் என்று பாராட்டியுள்ள நமீரா சலீம், இந்தியாவை மட்டுமல்லாது ஒட்டுமொத்த உலக விண்வெளி நிறுவனங்களையும் பெருமை கொள்ளச் செய்ததாகக் கூறியுள்ளார்.
விண்வெளித் துறையில் தெற்காசிய நாடுகளின் பங்கு குறிப்பிடத்தக்கது என்று குறிப்பிட்ட நமீரா சலீம், எந்த நாடு முன்னேறிச் செல்கிறது என்பது முக்கியமல்ல என்று தெரிவித்துள்ளார். பூமியில் அரசியல் எல்லை நம்மை பிரித்தாலும் விண்வெளி சேர்த்து வைப்பதாக நமீரா சலீம் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார்.













