காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு நீக்கியதுடன், மாநிலத்தை இரண்டு யூனியன் பிரதேசமாக மாற்றியது. மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு பாகிஸ்தான் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. காஷ்மீர் பிரச்சினையை சர்வதேச பிரச்சினையாக்க முயற்சித்த பாகிஸ்தான், அதில் தோல்வி அடைந்தது.
ஜம்மு-காஷ்மீரில் தாக்குதல்கள் நடத்த திட்டமிட ஜெய்ஷ்-இ-முகமது, லஷ்கர் இ தொய்பா, ஹிஸ்புல் முஜாஹிதீன் உள்பட பல பயங்கரவாத குழுக்களுடன் பாகிஸ்தான் உயர்மட்ட அதிகாரிகள் சந்திப்புகளை நடத்தி வருகின்றனர். பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ. அமைப்பு இஸ்லாமாபாத்தில் பல பயங்கரவாத குழுக்களுடன் ஒரு உயர் மட்ட சந்திப்பை நடத்தியது. இஸ்லாமாபாத்தில் நடந்த இந்த கூட்டத்தில் ஜெய்ஷ்-இ-முகமது, லஷ்கர் இ தொய்பா, ஹிஸ்புல் முஜாஹிதீன், காலிஸ்தானி ஜிந்தாபாத் படை, சில காலிஸ்தான் சார்பு பயங்கரவாத குழுக்களும் கலந்து கொண்டன.
ஜம்மு-காஷ்மீர் மீது மீண்டும் சர்வதேச கவனத்தை ஈர்க்க அங்கு தாக்குதல் நடத்த பாகிஸ்தான் திட்டமிட்டு உள்ளது.
ஜம்மு-காஷ்மீரில் உள்ள இந்திய ராணுவம் மற்றும் பிற பாதுகாப்பு படை முகாம்கள் மீது தாக்குதல்களை நடத்த பாகிஸ்தானை தளமாகக் கொண்ட பயங்கரவாத அமைப்பு லஷ்கர்-இ-தொய்பா திட்டமிட்டுள்ளதாக புலனாய்வு அமைப்புகளின் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. பாதுகாப்பு அமைப்பு மீது தாக்குதல்களைத் திட்டமிடுவதில் நான்கு லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாதிகள் ஈடுபட்டுள்ளனர் என்றும் கூறப்படுகிறது. சம்பா மாவட்டத்தில் உள்ள பாரி பிராமண முகாம் மற்றும் ஜம்மு பிராந்தியத்தில் உள்ள சுன்ஜ்வான் மற்றும் கலுச்சக் இராணுவ முகாம்கள் மீது பயங்கரவாதி தாக்குதல்களை நடத்த முயற்சிக்கலாம் என கூறப்படுகிறது.
ஷோபியன் பகுதி வழியாக பயங்கரவாதிகள் ஊடுருவி பின்னர் ஜம்முவை அடைய திட்டமிட்டுள்ளதாகவும் செய்திகள் வந்துள்ளன.
கடந்த வாரம் 50 தீவிரவாதிகள் இந்தியாவுக்குள் நுழைவதற்கு கட்டுப்பாட்டுக் கோட்டின் அருகே காத்திருந்தனர். குல்மார்க்கில் இருந்து கைது செய்யப்பட்ட இரண்டு பாகிஸ்தான் பயங்கரவாதிகள் இந்த தகவலை வெளியிட்டுள்ளனர்.













