திருநெல்வேலியில் இருந்து சாத்தான்குளத்திற்கு மூலக்கரைப்பட்டி,, சோமநாதபேரி, கலுங்குவிளை,நெடுங்குளம் வழியாக ‘தங்கப்பறவை’ என்ற பெயரில் ‘165 எச்’ என்ற எண்ணுள்ள பேருந்து காலை, மாலை இயக்கப்படுகிறது. இதனால் இப்பகுதியில் 15க்கு மேற்பட்ட ஊர்களைச் சேர்ந்த மக்கள் பயன் பெறுகிறார்கள். காலையும் மாலையும் மாணவர்கள் பள்ளிகள், கல்லூரிகளுக்கு செல்வதற்கு இது வசதியாக உள்ளது.
அதனால் இதை ‘மாணவர்கள் ஸ்பெஷல்’ எனக் கருதுவதாலோ என்னவோ , சனி, ஞாயிறு இரு நாட்களில் பெரும்பாலும் இந்தப் பேருந்துக்கு விடுமுறை கொடுத்து விடுகிறார்கள். அதனால் அத்தியாவசிய பணிகளுக்கு செல்ல வேண்டிய தொழிலாளர்கள், அவசர மருத்துவ சேவை பெற வேண்டியவர்கள் அவதிப்படுகின்றனர்.
‘அவ்வாறான விடுமுறை நாட்களில் தங்கப் பறவைக்கு பதிலாக ஏதாவது ‘புல் புல்’ பறவை விட்டால் கூட சாவர்க்கர் பாணியில் சாத்தான்குளத்துக்கும் திருநெல்வேலிக்கும் போய் சேர்வோம்’ என்று பொதுமக்கள் சலித்துக் கொள்கின்றனர்.

‘ தங்கப் பறவை பயணிக்கும் பாதையில் உள்ள கிராமங்களில் பெரும்பாலும் கிறிஸ்தவ பெருமக்கள் வசிக்கின்றனர். அவர்கள் ஞாயிறு தோறும் பல்வேறு ஆலயங்களுக்கு, சபைகளுக்கு சென்று வழிபாடு செய்யவும், சனிக்கிழமை நாலுமாவடி செல்லவும் இந்தப் பேருந்து தான் வசதியாக இருக்கும். இந்துகளின் சனி பிரதோஷ வழிபாடுக்கும் இதுதான் வாய்ப்பாக உள்ளது. எனவே இதன் சனி, ஞாயிறு பயணம் எவ்விதத்திலும் தவிர்க்க இயலாதது.
பல்லாண்டுகள் பாதை தவறாமல் பயணித்துக் கொண்டிருக்கும் இந்தப் பேருந்தை, கடமை தவறாமல் தினமும் இயக்க வேண்டும். பேருந்துக்கு வாரந்தர விடுமுறை விட்டால், பொதுமக்களாகிய நாங்களும் எங்கள் பணிகளுக்கு ஒரு நாள் விடுமுறை விட்டுவிட்டு போராட்டத்தில் ஈடுபட நேரிடும்’ என்று கலுங்குவிளை தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி முன்னாள் தலைவர் எழுத்தாளர் அய்கோ தெரிவித்துள்ளார்.













