2.5 கோடி ரூபாய் மானியம் வேண்டுமா…? ஆட்சியர் அறிவிப்பு…!

0
135

தூத்துக்குடி மாவட்டத்தில் சிறிய அளவிலான ஜவுளிப்பூங்கா அமைக்க தொழில் முனைவோருக்கு மாவட்ட ஆட்சியர் கோ.லட்சுமிபதி அழைப்பு விடுத்துள்ளார்.
ஜவுளித்துறையில் முன்னோடி மாநிலங்களுக்குள் ஒன்றாக தமிழகம் விளங்குகிறது. இத்துறையின் கட்டமைப்பை வலுப்படுத்த அரசு செயல்படுத்திவரும் பல திட்டங்களுக்குள் சிறிய அளவிலான ஜவுளிப்பூங்கா அமைக்கும் திட்டமும் ஒன்றாகும். இத்திட்டத்தின் கீழ் குறைந்தபட்சம் 2 ஏக்கர் நிலப்பரப்பில் குறைந்தபட்சம்  3  ஜவுளி உற்பத்தி தொழிற்கூடங்கள் அமைக்கப்பட வேண்டும்.


தகுதிவாய்ந்த திட்ட மதிப்பில் (பொது உள்கட்டமைப்பு வசதிகள், பொதுப் பயன்பாட்டு மற்றும் தொழிற்சாலைக்கான கட்டிடங்கள்) 50 சதவீதம் அல்லது ரூ.2.50 கோடி இவற்றில் எது குறைவானதோ அது தமிழ்நாடு அரசின் மானியமாக வழங்கப்படுகிறது. சிறிய அளவிலான ஜவுளிப்பூங்காக்கள் அமைப்பதன் மூலம் நடுத்தர நிறுவனங்களின் மூலம் வளர்ச்சி ஏற்பட்டு மாவட்டத்தில் வேலைவாய்ப்பு பெருகும், அதிகளவில் அன்னியச் செலவாணி ஈட்டுவதற்கு வாய்ப்புகள் ஏற்படும்.


மேற்படி திட்டம் குறித்த விழிப்புணர்வுக் கூட்டம், மாவட்ட ஆட்சியர் தலைமையில்  வருகின்ற 16.08.2024 அன்று பிற்பகல் 4.00 மணியளவில்  தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்ட அரங்கத்தில் நடைபெறவுள்ளது. இக்கூட்டத்தில் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து தொழில் முனைவோர்கள், ஜவுளித் தொழில் சார்ந்த சங்கங்கள், வளரும் தொழில் முனைவோர்கள் ஆகியோர் கலந்து கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சியர் கோ.லட்சுமிபதி தெரிவித்துள்ளார். 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here