தூத்துக்குடி மாவட்ட காவல்துறையினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் அவர்கள் உத்தரவின்படி மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல் துணை கண்காணிப்பாளர் திரு. சிவசுப்பு தலைமையில் தூத்துக்குடி மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல் ஆய்வாளர் திருமதி. ஜூடி மற்றும் உதவி ஆய்வாளர் திரு. ரவிக்குமார் தலைமையிலான தனிப்படை போலீசார் நேற்று (28.08.2023) தூத்துக்குடி புதூர்பாண்டியாபுரம் சுங்கச்சாவடி அருகே ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது, அங்கு சந்தேகத்திற்கிடமான முறையில் ஒன்றன்பின் ஒன்றாக வந்த 2 கார்களை நிறுத்தி சோதனை செய்ததில், மேற்படி கார்களில் தூத்துக்குடி திரேஸ்புரம் பகுதியை சேர்ந்த ஞானம் மகன் ஆரோன் (31) மற்றும் அவரது மனைவி சிபானியா (31), தூத்துக்குடி பாரதி நகரை சேர்ந்த அய்யாத்துரை மகன் இசக்கி கணேஷ் (29), இலங்கை நாட்டைச் சேர்ந்த, தற்போது சென்னை நுங்கம்பாக்கம் பகுதியிலிருந்த வின்சன் பினிஷ் மகன் ஜோசப் ஸ்ரீபாலன் கெனியு பினிஷ் (63), தூத்தக்குடி அண்ணாநகரை சேர்ந்த சின்னத்துரை மகன் மூக்காண்டி (எ) ராஜா (30), கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் பகுதியை சேர்ந்த ஜான் மகன் சஜின் ரெனி (35), திருநெல்வேலி மாவட்டம் பாட்டப்பத்து பகுதியை சேர்ந்த இசக்கிதாஸ் மகள் ஸ்ரீமதி இந்திரகாந்தி (23), சென்னை பரங்கிமலையை சேர்ந்த மாணிக்கம் மகன் தயாளன் (45), தூத்துக்;குடி மாவட்டம் சாத்தான்குளம் ஆசீர்வாதபுரத்தை சேர்ந்த ஆறுமுகம் மகன் மணிகண்டன் (32), தூத்துக்குடி அண்ணாநகரை சேர்ந்தவர்களான முனியசாமி மகன் காளீஷ்வரன் (24), ஈனமுத்து மகன் விக்னேஷ்வரன் (29), மாரியப்பன் மகன் திருமேனி (29), சென்னை மயிலாப்பூரைச் சேர்ந்த ராஜேந்திரன் மகன் சம்பத்குமார் (50), கடலூர் மாவட்டம் தேவனாம்பட்டிணம் பகுதியை சேர்ந்த முத்து கிருஷ்ணன் மகன் சரவணன் (45) ஆகியோர் கார்களில் கஞ்சா கடத்தியதும், மேலும் இவர்களுடன், செல்லும் வழியில் போலீசார் இருப்பது குறித்து தகவல் தெரிவிப்பதற்காக இருசக்கர வாகனத்தில் வந்த தூத்துக்குடி மீளவிட்டான் ரோடு பகுதியை சேர்ந்த ஜெயராஜ் மகன் திருமணிக்குமரன் (27) மற்றும் தூத்துக்குடி அண்ணாநகரை சேர்ந்த மந்திரம் மகன் அருண்குமார் (27) ஆகியோர் கஞ்சா கடத்துவதற்கு உதவியதும் தெரியவந்தது.
உடனே மேற்படி தனிப்படை போலீசார் எதிரிகளான ஆரோன், அவரது மனைவி சிபானியா, இசக்கி கணேஷ், ஜோசப் ஸ்ரீபாலன் கெனியு பினிஷ், மூக்காணி (எ) ராஜா, சஜின் ரெனி, ஸ்ரீமதி இந்திராகாந்தி, தயாளன், மணிகண்டன், காளீஸ்வன், விக்னேஷ்வரன், திருமேனி, சம்பத்குமார், சரவணன், திருமணிகுமரன் மற்றும் அருண்குமார் ஆகிய 16 பேரைகைது செய்தும் அவர்களிடமிருந்து 228 கிலோ கஞ்சா, கடத்தி வருவதற்கு பயன்படுத்துப்பட்ட 2 கார்கள் மற்றும் இருசக்கர வாகனம் ஆகியவற்றையும் பறிமுதல் செய்தனர்.
, கைது செய்யப்பட்ட மணிகண்டன் சாத்தான்குளத்தைச் சேர்ந்த வக்கீல். ஆரோன் என்பவர், கடந்த 09.05.2023 அன்று ஆந்திராவில் இருந்து இலங்கைக்கு கடத்தி செல்வதற்காக தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் வேலன் புதுக்குளம் பகுதியில் ஒரு கோழிப்பண்ணையில் 2000 கிலோ கஞ்சாவை பதுக்கி வைத்திருந்த வழக்கில் மதுரை மாவட்டம் கீரைத்துறை காவல் நிலையத்தில் வழக்குபதிவு செய்யப்பட்டு தலைமறைவாக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.