தூத்துக்குடி மாவட்டம் அன்பின்நகரத்தைச் சேர்ந்த ராமச்சந்திரன் தனது மோட்டார் பைக்கை போலீசார் பறிமுதல் செய்ததால் விரக்தியடைந்து விஷம் குடித்தார். திசையன்விளை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் முதலுதவி சிகிச்சை பெற்று மேல் சிகிச்சைக்காக நெல்லை மருத்துவமனைக்கு108 ஆம்புலன்ஸ் மூலம் கொண்டுசென்ற வழியில் உயிரிழநதார்.
ராமச்சந்திரன் 17 வயது சிறுவன், அவன் ஸ்பீடு பைக்கை கல்லூரி மாணவி மீது மோதுவது போல ஓட்டிச் சென்றதால் பிடித்தோம் என்று கூறிய போலீசார், உடனடியாக வழக்கு பதிவு செய்யவில்லை, இழுத்தடித்தார்கள். அதனாலயே விரக்தியில் தற்கொலை செய்து கொண்டார் என அப்பகுதியினர் குற்றம் சாட்டுகின்றனர்.
எளிய குடும்பத்தில் பிறந்த ஒருவருக்கு, அதிக செல்லம் காரணமாக சிறு வயதிலேயே விலை உயர்ந்த பைக்கை பெற்றோர் அன்பளிப்பு கொடுப்பது ஆபத்தை வரவழைப்பது என்பது ஒரு புறம் இருக்க, விதிமீறல் வாகனங்களை பிடித்து வைத்துக்கொண்டு பேரம் பேசுவதும் போலீஸ் நிலையத்தில் சகஜமாக நடக்கிறது. ராமச்சந்திரன் விவகாரத்திலும் சிலர் போலீசாருக்கும் அவருக்கும் இடையே பேரம் பேசி, பைக்கை வெளியில் கொண்டு வருவதாக உறுதியளித்து, ரூ.20 ஆயிரம் வரை பெற்றதாக தகவல் பரவுகிறது. இன்ஸ்பெக்டர் நேரடியாக பேரம் பேசியதாகவும் குற்றம் சாட்டப்படுகிறது.
எனவே உயர் அதிகாரிகள் களமிறங்கி, தீவிர விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்













