கோவை அடுத்த சூலூர் அருகே அப்பநாயக்கன்பட்டி ஊராட்சி உள்ளது. இந்த ஊராட்சி மன்ற தலைவராக சாந்தி ராஜேந்திரன் இருந்து வருகிறார். இவர் அதிமுக சார்பில் வெற்றி பெற்று தற்போது திமுக கட்சியில் இணைந்துள்ளார். இந்நிலையில் பொங்கல் பரிசு தொகுப்பு பொருள்கள் நேற்று முதல் அப்பகுதியில் உள்ள பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.
இதனை ஊராட்சி மன்ற தலைவர் சாந்தி ராஜேந்திரன் தொடங்கி வைத்தார்.அப்போது அந்த ஊராட்சியின் முன்னாள் தலைவர் தங்கவேலு, மற்றும் சிவசண்முகம், ஆகி யோர் பொருட்களை கொடுக்க கூடாது என தற்போதைய ஊராட்சி மன்ற தலைவரிடம் தகராறில் ஈடுபட்டனர்.மேலும், பொருட்களை தர விடாமல் பிடுங்கி வீசினர்.
இதன் காரணமாக ரேஷன் கடை ஊழியர் கடையை மூடி பொருட்கள் கொடுக்காமல் இருந்துள்ளார். இதனையடுத்து பொருட்களை வாங்க வந்த பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதன் காரணமாக அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த சூலூர் காவல் ஆய்வாளர் மாதையன்,மற்றும் உதவி ஆய்வாளர் நவனீதகிருஷ்ணன் மற்றும் போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் சமாதானம் பேசி பொருட்கள் வழங்குவதற்கு ஏற்பாடு செய்தனர்.














