அண்ணா பல்கலைக்கழகத்தில் பெரும் சர்ச்சைக்கு நடுவே துணைவேந்தரானவர் சூரப்பா. அவர் வந்தபின்பு சில பிரச்சினைகள் எழுந்து அடங்கின. இந்நிலையில், அண்ணா பல்கலைக்கழகத்தில் பொறியியல் இரண்டாம் ஆண்டு படிக்கும் மாணவர்களுக்கு தத்துவவியல் படிப்பு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அதன்கீழ் பகவத் கீதை பாடமாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.அகில இந்திய தொழில்நுட்பக் கழகத்தின் பரிந்துரையின்படி இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
அதிலும் குறிப்பாக சென்னையில் உள்ள எம்.ஐ.டி, சி.இ.ஜி, ஏ.சி.டி, எஸ்.ஏ.பி.வளாகத்தில் பயிலும் மாணவர்களுக்கு இந்தாண்டு முதல் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இது மாணவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பொறியியல் படிப்புக்கு பொருத்தமே இல்லாத பாடப்பிரிவுகளா? என கல்வியாளர்கள் கேள்வியெழுப்பியுள்ளனர். திமுக, மார்க்சிஸ்ட் உள்ளிட்ட அரசியல் கட்சித்தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில், பகவத் கீதையை உள்ளடக்கிய தத்துவவியலை விருப்பப் பாடமாக மாற்ற அண்ணா பல்கலைக் கழகம் முடிவு செய்துள்ளது. தத்துவவியல், பகவத் கீதை உள்ளிட்டவற்றை விரும்பியவர்கள் மட்டும் படிக்கலாம் என துணைவேந்தர் சூரப்பா தெரிவித்துள்ளார்.














