கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள தமிழ்நாடு முதலீட்டாளர்கள் நல பாதுகாப்பு சிறப்பு நீதிமன்றத்தின் (டான்பிட்) சிறப்பு நீதிபதியாக பணியாற்று பவர் ஏ.எஸ். ரவி. இவரது மனைவி, மகன், மகள் ஆகியோருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டது.
இதையடுத்து மூரும் கடந்த 16ஆம் தேதி கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். சிகிச்சைக்கு பிறகும் அனைவரும் கடந்த 23 ஆம் தேதி நலமுடன் வீடு திரும்பினர். இதையடுத்து, சிகிச்சையளித்த மருத்துவர்கள், செவிலியர்களுக்கு நன்றி தெரிவித்து அரசு மருத்துவமனையின் முதல்வருக்கு நீதிபதி ஏ.எஸ்.ரவி அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:-
எனது குடும்ப உறுப்பினர்களை கோவையில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனைகளில் ஏதேனும் ஒன்றில் அனுமதிக்குமாறு பலரும் அறிவுறுத்தினர். அங்கு செலவாகும் முழு தொகையையும் திரும்பப் பெற்றுக் கொள்ள எனக்கு வழிவகை இருந்தும், அரசு மருத்துவமனையில் அவர்களை அனுமதிப்பதில் உறுதியாக இருந்தேன்.
ஏனெனில், இங்குள்ள மருத்துவர்கள், செவிலியர்களின் அர்ப்பணிப்பு, சேவை குறித்து அறிவேன். எனது 21 ஆண்டு கால பணிக் காலத்தில், சிகிச்சைக்காக எப்போதும் அரசு மருத்துவ மனைகளையே நாடியுள்ளேன்.
எனக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு, கடந்த 2020 நவம்பரில் உங்கள் மருத்துவமனையில் உள் நோயாளியாக சிகிச்சை பெற்றேன். எனது மனைவி , மகள் ஆகியோர் மோசமான நிலையில் இருந்த போதும் மருத்துவர்கள் அச்சுறுத்தவோ, பதற்றமடையச் செய்யவோ இல்லை.
இதுதவிர, தீவிர சிகிச்சை பிரிவில் இரவும், பகலும் பணியாற்றிய மருத்துவர்கள், செவிலியர் , செவிலிய மாணவிகள், தூய்மைப் பணியாளர்களுக்கும் நன்றி. மனிதனுக்கு செய்யும் சேவையே கடவுளுக்கு ஆற்றும் சேவை. அவர்களின் சேவையில் கடவுளை காண்கிறோம்.
இவ்வாறு அதில் கூறியுள்ளார்.











