தெற்கு ரயில்வே பொதுமேலாளர் சென்னை, சேலம், திருச்சி, மதுரை, பாலக்காடு, திருவனந்தபுரம் ஆகிய கோட்டங்களில் வருடத்திற்கு ஒருமுறை ஒரு ரயில்வே பிரிவை ஆய்வு செய்வது வழக்கம். அதன்படி, இன்று மதுரை – திருச்சி இரட்டை வழிப் பாதையில் “அப் லைனில்” ஆய்வு செய்தார்.
முதலில் ,மதுரை ரயில் நிலையத்தில் காலை 9 மணிக்கு ஆய்வை தொடங்கிய பொது மேலாளர் ஜான் தாமஸ், மதுரையில் ரயில் நிலைய நவீன சிக்னல் ஏற்பாடுகளை ஆய்வு செய்தார். பின்பு, முதலாவது நடைமேடையில் உள்ள பயணிகள் வசதிகள் மற்றும் நடைமேம்பாலம் ஆகியவற்றை ஆய்வு செய்தார். பின்பு, மதுரை ரயில் நிலைய புதிய கட்டட பணித்திட்டங்களை சிறப்பு வீடியோ திரை மூலம் ஆய்வு செய்து ஆலோசனை வழங்கினார்.
புதிய ரயில் நிலையம் இரண்டடுக்கு கட்டிடமாக அமைய இருக்கிறது. ரயில் நிலையத்திலிருந்து பெரியார் பேருந்து நிலையத்திற்கு செல்ல சுரங்கப்பாதை அமைக்கும் திட்டமும் இருக்கிறது.
பொது மேலாளர் செய்தியாளர்களிடம் பேசியபோது, ‘பாம்பன் பாலம் பணிகள் விரைவில் முடிவடையும். கொரோனா தொற்றுக்கு முன்பு இயங்கிய பயணிகள் ரயில்கள் படிப்படியாக இயக்கப்படும்’ என்றார். ஆய்வின்போது, பொது மேலாளருடன் முதன்மை வர்த்தக மேலாளர் ரவி வல்லூரி, முதன்மை ரயில் இயக்க மேலாளர் ஸ்ரீ குமார், முதன்மை பொறியாளர் பிரபுல்ல வர்மா ஆகியோர் கலந்து கொண்டனர்.













