கன்னியாகுமரி படித்தவர்கள் மிகுந்த மாவட்டம். ஆனால், அதிகம் படித்த கேரள மாநிலத்தில் இருப்பது போல் சாதி, சமய பேதம் பாராட்டும் மாவட்டம்
.
இங்கு முதல் நாள் மீனவப் பெண் ஒருவரை பஸ்சில் இருந்து இறக்கிவிட்டு தனது அதிகார திமிரை நடத்துநர் ஒருவர் காட்டினார். அடுத்த இரு நாட்களில் நரிக்குறவர் பெண்ணை பஸ்சிலிருந்து இறக்கிவிட்டு மீண்டும் தமது பேத உணர்வை நடத்துநர் ஒருவர் காட்டியுள்ளார்.
இரு பிரச்சினைகளும் முதல்வர் பார்வை வரை போய் சட்ட நடவடிக்கைக்கு உட்பட்ட நிலையில், மீனவப் பெண்மணி நடத்துநரை தண்டிக்க வேண்டாம் எனப் பெருந்தன்மையாக கூறிவிட்டார். நரிக்குறவரை அவமதித்த நடத்துநரோ, அவரையும் அவர் கணவரையும் அழைத்துச்சென்று காலில் பால் ஊற்றி பாதாபிஷேகம் செய்து அவர்களை மதிப்பதாக காட்டிக்கொள்கிறார்.
கொரோனா கால தொடக்கத்தில் துப்புரவு பணியளர்களுக்கும் இப்படித்தான் மலர் தூவியும், பாதங்களை கழுவியும் பாசாங்கு காட்டினர் அவர்களை அதுவரை மதித்திராத நடுத்தர, உயர்தர வர்க்கத்தார். கொரோனா பீதியாலும், அதற்கு அவர்களின் பணிகள் அத்தியாவசியம் என்பதாலும் உள்ளூர எழுந்த உணர்வுக்குழப்பம் அவ்வாறு செய்ய வைத்தது.
ஆனால், அப்படி செய்த யாவரும் அருந்ததியர் மக்களை தங்கள் காலடியினும் கீழாக மதிக்கும் மனோபாவம் கொண்டவர்கள் தாம். அரசும் அவ்வாறே அவர்களை மதிப்பதாக தற்காலிகமாக காட்டியது. ஆனால், அவர்களுக்குரிய பேரிடர் கால ஊதியமோ, சலுகையோ வழங்கவில்லை. கொரோனாவுக்கு இறந்த அவர்களில் பாதிப்பேருக்கு இன்னும் நிவாரணம் வரவில்லை.
அதுபோல்தான் நரிக்குறவரை அடிமன ஆழத்திலிருந்து வெறுத்து அரசு பேருந்தை தன் பேருந்தாக கருதி திமிராக இறக்கிவிட்டவர்கள், பணிவிடை செய்து சட்ட நடவடிக்கையிலிருந்து தப்ப எண்ணுகிறார்கள். அந்த பாதாபிஷேகத்தையும் செயற்கையான மனநிலையில், அதுவும் ஓரளவு நக்கலான சிரிப்புடனே செய்கின்றனர்.
சட்டம் தன் கடமைஒயை செய்வதே சரியாக இருக்கும்.














