முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் ஹெலிகாப் டர் விபத்தில் மரணம் அடைந்த சம்பவத்தை, கோவையில் உள்ள ஒரு கல்லூரியில் படிக்கும் மாணவர்களில் ஒரு பிரிவினர் கொண்டாடியதாக கேரளாவில் உள்ள ஒரு சமூகவலைத்தள சேனலில் ஒளிபரப்பானது. இது மேலும் சில சமூகவலைத்தள குரூப்களிலும் பகிரப்பட்டு வருகிறது.
இது குறித்து கோவை போலீஸ், அந்த கல்லூரியிலும் விசாரணை நடத்தியது. அப்போது சம்பவம் நடந்ததாக கூறப்படும் தினத்தன்று முப்படை தளபதி மரணம் அடைந்ததையொட்டி கல்லூரிக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருந்ததும், எப்போதோ நடைபெற்ற மாணவர்கள் ஆண்டுவிழா கொண்டாட்டத்தை தவறாக சித்தரித்து, முப்படை தளபதியின் மரணத்துடன் இணைத்து இட்டுக்கட்டி ஒளிபரப்பியதும் உறுதி செய்யப்பட்டது. இதுபற்றிய தகவலை கேரள போலீஸ் அதிகாரிகளுக்கு தெரிவித்திருப்பதுடன், சம்பந்தப்பட்ட சமூக வலைத்தள சேனலுக்கு நோட்டீஸ் அனுப்பவும் கோவை போலீஸ் நடவடிக்கை எடுத்து வருகிறது.













