கோவை கருமத்தம்பட்டி அருகே உள்ள செந்தில் நகர் பகுதியை சேர்ந்தவர் நிர்மலா ( 40). இவரது கணவர் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு இறந்துவிட்டார். இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளன. தற்போது நிர்மலா தனது குழந்தைகளுடன் கருமத்தம்பட்டியில் உள்ள அவரது தாய் வீட்டில் வசித்து வருகிறார். இதனால் செந்தில் நகர் பகுதியில் உள்ள வீட்டுக்கு நிர்மலா அடிக்கடி செல்வதில்லை. இதனால் அந்த வீடு பெரும்பாலும் பூட்டிய நிலையிலேயே காணப்படும்.
இதை நோட்டமிட்ட மர்ம நபர்கள் 2 பேர் நேற்று இரவு நிர்மலாவின் வீட்டுக்கு சென்று கதவின் பூட்டை உடைத்தது வீட்டின் உள்ளே சென்றார். அப்பொழுது கதவின் பூட்டை உடைக்கும் சத்தம் கேட்டு அருகில் உள்ள நாகராஜ் என்பவர் திடுக்கிட்டு எழுந்தார். பின்னர் அவர் அக்கம் பக்கத்தில் உள்ளவர்களை தொலைபேசியில் தொடர்பு கொண்டு இது குறித்து தெரிவித்துள்ளார். உடனடியாக அருகில் உள்ளவர்கள் அந்த மர்ம நபர்களை பிடிக்க முயற்சித்தனர். அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் வருவதை அறிந்த அந்த கொள்ளையர்கள் இருவர் வீட்டிலிருந்த வெள்ளி நகை மற்றும் லேப்டாப், ஆகியவை திருடிக்கொண்டு அங்கிருந்து தப்பி ஓடினார். இதைப்பார்த்த அக்கம் பக்கத்தினர் கொள்ளையர்கள் 2 பேரையும் துரத்தி பிடிக்க முயற்சித்தனர்.
அப்பொழுது ஒருவர் ஓடி விடவே மற்றொரு கொள்ளையனை பிடித்தனர். இதனை அடுத்து உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த கருமத்தம்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜதுரை மற்றும் காவல்துறையினர் அந்தக் கொள்ளையனிடம் இருந்த லேப்டாப் மற்றும் வெள்ளி பொருட்களை பறிமுதல் செய்து போலீஸ் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அவர் வேடப்பட்டியை சேர்ந்த முனிஸ்வரன் (வயது 39) என்பதும், ஆயுதப்படையில் போலீஸ்காரராக இருந்தபோது திருட்டு வழக்கில் சிக்கி பணி நீக்கம் செய்யப்பட்டதும் தெரியவந்தது. தப்பி ஓடிய மற்ற ஒருவர் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதே வீட்டில் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு மர்ம நபர் ஒருவர் வீட்டின் கதவை உடைத்து உள்ளே இருந்த 2 பவுன் தங்க நகைகளை கொள்ளை அடித்து சென்றது குறிப்பிடத்தக்கது.











