கோவை சின்ன தடாகம் பகுதியை சேர்ந்த ராமராஜ் என்பவரின் மகன் தினேஷ் .இவர் தனியார் நிறுவனத்தில் டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் ஆக பணிபுரிந்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு இவர் வாட்ஸ்அப் எண்ணிற்கு பகுதிநேர வேலைவாய்ப்பு குறித்து மெசேஜ் ஒன்று வந்தது. அந்த மெசேஜை கிளிக் செய்தபோது அதில் சுய விவரங்களை பதிவு செய்ய கூறப்பட்டிருந்தது. இதையடுத்து தினேஷ் அதில் கேட்கப்பட்ட விவரங்கள் அனைத்தையும் பூர்த்திசெய்து அத்துடன் தனது வங்கி கணக்கு எண் இமெயில் ஐடி யையும் பதிவு செய்தார்.
இதை அடுத்து செல்போன் மூலம் தினேஷுக்கு அழைப்பு வந்தது. அதில் பேசிய நபர்கள் கொடுக்கப்பட்ட ஆன்லைன் வெப்சைட் மூலம் பொருள்களை வாங்கி உடனடியாக விற்பதன் மூலம் அதிக லாபம் பெறலாம் என்று ஆசைவார்த்தை கூறி உள்ளனர். இதை நம்பிய தினேஷ் முதல்கட்டமாக ஐந்தாயிரம் ரூபாய்க்கு ஒரு பொருளை வாங்கி உடனடியாக ஆன்லைன் மூலம் அதனை பெற்றுள்ளார். அதில் லாபம் கிடைத்ததையடுத்து தொடர்ந்து ஒரு லட்சத்து 13 ஆயிரம் ரூபாய் வரை தினேஷ் பொருட்களை வாங்கி விறறுள்ளார் .ஆனால் கமிஷன் தொகையும் கிடைக்கவில்லை. வாங்கி ஆன்லைன் மூலமே விற்ற பொருட்களுக்கான தொகையும் கிடைக்கவில்லை.
இதையடுத்து தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த தினேஷ் இதுகுறித்து மாவட்ட சைபர் கிரைம் போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தார். புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.















