வடமதுரை தொப்பம்பட்டி பிரிவு பகுதியைச் சேர்ந்த நஞ்சுண்ட கவுண்டர் என்பவரின் மகன் ஆறுமுகம் (75). இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு நரசிம்மநாயக்கன்பாளையம் பகுதியில் உள்ள ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா ஏடிஎம் மையத்தில் பணம் எடுப்பதற்காக சென்றிருந்தார். வயது முதுமை காரணமாக ஆறுமுகம் ஏடிஎம் எந்திரத்தில் பணம் எடுக்க முடியாமல் நின்று கொண்டிருந்தார். அப்போது ஏடிஎம் மையத்தின் வெளியே ஒரு ஆணும் பெண்ணும் நின்று கொண்டிருந்தனர். அவர்களிடம் ஆறுமுகம் ஏடிஎம் எந்திரத்தில் தனது கார்டை பயன்படுத்தி 3 ஆயிரம் ரூபாய் பணம் எடுத்து தருமாறு கூறினார்.
அந்த ஆணும் பெண்ணும் படம் எடுத்துத் தருவது போல உதவி மூன்றாயிரம் ரூபாய் பணத்தை எடுத்து ஆறுமுகத்திடம் கொடுத்தனர். சிறிது நேரத்தில் வீட்டிற்கு சென்ற ஆறுமுகத்தின் செல்போனிற்கு இரண்டு தவணைகளாக பத்தாயிரம் ரூபாய், ஐந்தாயிரம் ரூபாய் பணம் எடுக்கப் பட்டிருந்தது மெசேஜ் மூலம் தெரியவந்தது. மேலும் ஐந்தாயிரம் ரூபாய்க்கு பொருட்கள் வாங்கியதும் மெசேஜ் மூலம் தெரியவந்தது.
இதையடுத்து ஆறுமுகம் பெரியநாயக்கன்பாளையம் போலீஸ் ஸ்டேஷனில் இதுகுறித்து புகார் அளித்தார். பின்னர் நேற்று நரசிம்மநாயக்கன் பாளையத்தில் உள்ள ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா ஏடிஎம் பகுதிக்கு சென்றார் .அப்போது தனது ஏடிஎம் கார்டு மூலம் பணத்தை எடுத்து மோசடி செய்த அந்த ஆணும் பெண்ணும் நிற்பதைப் பார்த்தார். இதையடுத்து அருகில் உள்ளவர்கள் உதவியுடன் ஆறுமுகம் அந்த ஆணையும் பெண்ணையும் சுற்றி வளைத்து பிடித்து பெரியநாயக்கன்பாளையம் போலீஸ் ஸ்டேஷனில் ஒப்படைத்தார்.
போலீசார் நடத்திய விசாரணையில் கரூர் மாவட்டம் குளித்தலையை சேர்ந்த சுரேஷ் என்பவர் என் மகன் சரவணகுமார்( 27) மற்றும் பெரிய நெகமம் பகுதியைச் சேர்ந்த இந்திர ராஜா என்பவரின் மகன் கமலவேணி (55) என்பதும் தெரியவந்தது. தொடர்ந்து அவர்கள் இருவரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.










