சிலை கடத்தல் வழக்குகளை விசாரிக்க ஐ.ஜி. பொன்.மாணிக்கவேல் தலைமையில் சிலைக்கடத்தல் தடுப்பு பிரிவை அமைத்து, கடந்த 2017ம் ஆண்டு ஜூலை மாதம் சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.
கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 30ந்தேதி சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜி. பொன் மாணிக்கவேல் ஓய்வுபெற இருந்த நிலையில், ஐகோர்ட்டு புதிய உத்தரவை பிறப்பித்தது. அதாவது சி.பி.ஐ.க்கு வழக்குகளை மாற்றும் தமிழக அரசின் அரசாணையை சட்டவிரோதம் என்று கூறி ரத்து செய்ததோடு, ஓய்வுபெறும் பொன் மாணிக்கவேலை ஒரு வருடத்திற்கு சிறப்பு அதிகாரியாக நியமித்து பணி நீட்டிப்பு வழங்கி உத்தரவிட்டது. இதனை தொடர்ந்து அவர் சிலை கடத்தல் தொடர்புடைய வழக்குகளை விசாரித்து வருகிறார்.
இதனிடையே, நெல்லை கல்லிடைக்குறிச்சியில் இருந்து கடத்தப்பட்ட நடராஜர் சிலை ஆஸ்திரேலிய மியூசியத்தில் இருப்பது கண்டறியப்பட்டு உள்ளது. அங்கிருந்து மீட்கப்பட்டு டெல்லி கொண்டு வரப்பட்ட நடராஜர் சிலை நாளை மறுநாள் சென்னை கொண்டு வரப்படுகிறது என பொன்.மாணிக்கவேல் தெரிவித்து உள்ளார். சிலையின் தற்போதைய மதிப்பு ரூ.30 கோடிஎன்பது குறிப்பிடத்தக்கது.









