கோவையில் தினந்தோறும் வீட்டின் கதவை உடைத்து கொள்ளை அடிக்கும் சம்பவம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதில் பெரும்பாலான வழக்குகளில் குற்றவாளிகள் இன்னும் பிடிபடாமல் உள்ளனர்.
இந்நிலையில் கோவை துடியலூரை அடுத்த கவுண்டர் மில் அதிர்ஷ்ட லட்சுமி நகர் பகுதியில் வசித்து வருபவர் சீனிவாசன் (52). இவரது வீட்டில் இவரது மனைவி மற்றும் குடும்பத்தார் வசித்து வருகின்றனர். ஐஸ்கிரீம் டீலர் ஆன இவர் நேற்று இரவு சாப்பிட்டு விட்டு குடும்பத்துடன் வீட்டின் முதல் மாடியில் உள்ள படுக்கை அறையில் தூங்கிக் கொண்டிருந்தனர். இன்று அதிகாலை எழுந்து பார்த்தபோது வீட்டின் பீரோவில் வைக்கப்பட்டிருந்த ஒரு கோடியே 30 லட்சம் ரூபாய் மதிப்பிலான வைர நகைகள் மற்றும் 50 பவுன் தங்க நகை கொள்ளை அடிக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது.
இதையடுத்து அவர் துடியலூர் போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தார் .இதே போல அதே பகுதியில் ஆறு வீடுகளில் கொள்ளை முயற்சி நடைபெற்றது. அவர்கள் இதுகுறித்து துடியலூர் போலீசாரிடம் புகார் அளித்துள்ளனர். துடியலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஞானசேகரன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று கைரேகைகளை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.
சீனிவாசன் குடியிருந்த வீடு வில்லா வடிவிலான தனி சொகுசு வீடு ஆகும். அதே பகுதியில் உள்ள வீடுகள் அனைத்தும் தனித்தனி வீடுகள் ஆக உள்ளது. இதை சாதகமாக்கி கொள்ளை சம்பவத்தை அரங்கேற்றி உள்ளனர்.