தந்தையின் கழுத்தில் காலால் மிதித்து கொன்ற மகன் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவை பீளமேடு நாராயணசாமி வீதியைச் சேர்ந்த மாசிலாமணி என்பவரின் மகன் ராஜு என்கிற துரைராஜ் (73 ).இவர் தனது மனைவி ராஜேஸ்வரி (63) மற்றும் மகன் ரவிராஜ் ஆகியோருடன் வசித்து வந்தார் .ராஜேஸ்வரி அதே பகுதியில் உள்ள வீடுகளில் வீட்டு வேலை செய்து வருகிறார். மகன் ரவிராஜ் தனியார் நிறுவனத்தில பணிபுரிந்து வருகிறார். அவருக்கு கடுமையான குடிப்பழக்கம் உள்ளது. இதன் காரணமாக அவரது குடும்பத்தாருடன் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
இந்நிலையில் நேற்று காலை ராஜேஸ்வரி வீட்டு வேலைக்காக புறப்பட்டு சென்று விட்டார். பின்னர் மீண்டும் மதியம் 3 மணியளவில் வீட்டிற்கு வந்து பார்த்தபோது வீட்டின் கதவு திறந்து கிடந்தது. வீட்டின் உள்ளே இரும்புக் கட்டிலில் தலையில் ரத்த காயங்களுடன் ராஜு பிணமாக கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். மேலும் ராஜுவின் தலை மற்றும் மார்பில் காலால் மிதித்த தடயம் இருந்தது. இதையடுத்து ராஜேஸ்வரி அழுதுகொண்டே பக்கத்து வீட்டில் உள்ளவர்களிடம் இதுபற்றி கேட்டுள்ளார். அப்போது பக்கத்து வீட்டிலிருந்தவர்கள் மகன் ரவிராஜ் வீட்டிற்கு வந்து சென்றதாக கூறினர்.
இதையடுத்து ராஜேஸ்வரி பீளமேடு போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தார். போலீசார் விசாரணையில் ராஜேஸ்வரி வேலைக்கு சென்ற பின் வீட்டிற்கு வந்த ரவிராஜ், தந்தையுடன் ஏற்பட்ட தகராறில் குடிபோதையில் அவரை கீழே பிடித்துத் தள்ளி மார்பில் மிதித்து, தலையை தரையில் அடித்து கொலை செய்தது தெரியவந்தது. அங்கிருந்து தப்பிச் சென்று தலைமறைவாக இருந்த ரவிராஜை பீளமேடு போலீசார் கைது செய்தனர்.













