தூத்துக்குடியில் கொலை உட்பட பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய ரவுடி எண்கவுண்டரில் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது..
தூத்துக்குடி அருகேயுள்ள கூட்டாம்புளி திருமலையா புரத்தைச் சேர்ந்தவர் வெற்றிவேல் மகன் துரைமுருகன் (39). இவர் மீது 7 கொலை வழக்குகள் உட்பட 35 வழக்குகள் உள்ளதாக கூறப்படுகிறது..
கடந்த வாரம் நெல்லை மாவட்டம், பாவூர்சத்திரத்தில் இருந்து ஒருவரை கடத்தி வந்து நெல்லை அருகே கொன்று புதைத்தது தொடர்பாக சப் இன்ஸ்பெக்டர் ராஜபிரபு தலைமையிலான தனிப்படை போலீசார் அவரை தேடி வந்தனர். இந்நிலையில், முத்தையாபுரம் முள்ளக்காடு பகுதியில் பதுங்கியிருந்த அவரை இன்று பிற்பகலில் போலீசார் சுற்றி வளைத்துள்ளனர்.
அப்போது போலீசார் மீது தாக்குதல் நடத்திவிட்டு தப்பமுயன்ற துரைமுருகன் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியதாக போலீசார் கூறுகின்றனர். போலீசார் சுட்டதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்..
சம்பவ இடத்தை தூத்துக்குடி மாவட்ட எஸ்பி ஜெயக்குமார், டவுண் டிஎஸ்பி கணேஷ், முத்தையாபுரம் இன்ஸ்பெக்டர் ஜெயசீலன் மற்றும் போலீசார் நேரில் சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினர். அவரது உடல் பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் எதிரொலியாக பரபரப்பு ஏற்பட்டுள்ளதால், தூத்துக்குடி முத்தையாபுரம் மற்றும் திருமலையாபுரம் பகுதிகளில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.









