நெல்லை மாவட்டத்தை இரண்டாக பிரித்து தென்காசியை தலைமையிடமாக கொண்டு தனி மாவட்டம் அமைக்கப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்து இருந்தார்.
இதற்காக அவருக்கும், தனி மாவட்டம் அமைக்க தீவிர முயற்சி செய்த செல்வ மோகன்தாஸ் பாண்டியன் எம்.எல்.ஏ.வுக்கும் நன்றி தெரிவிக்கும் விதமாக தென்காசியில் வர்த்தக சங்கம் சார்பில் பாராட்டு விழா நடைபெற்றது.
விழாவில் செல்வ மோகன்தாஸ் பாண்டியன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு பேசிய போது தென்காசியை தலைமையிடமாக கொண்டு தனி மாவட்டம் அமைக்க பேரவையில் நான் கொடுத்த கோரிக்கையை ஏற்று அறிவிப்பு செய்த முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.
தற்போது தென்காசி அருகே உள்ள ஆயிரப்பேரியில் அரசுக்கு சொந்தமான இடத்தில் மாவட்ட கலெக்டர் அலுவலகம் அமைக்க ஏற்பாடு செய்யப்படுகிறது. இதற்கான வரைபடத்தை முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்ல இருக்கிறேன்.
மேலும் மாவட்ட கலெக்டர் பங்களா தென்காசியில் அமையும். தொடர்ந்து மாவட்டத்திற்கான அனைத்து அரசு அலுவலகங்களும் தென்காசியில் அமைப்பதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன இவ்வாறு அவர் கூறினார்.














