தமிழ் நாட்டில் காவல் துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப்பணித்துறை, சிறைத்துறை, ஊர்க்காவல் படை மற்றும் தமிழ்நாடு விரல்ரேகைப் பிரிவு, தடயவியல் பிரிவு அலுவலர்கள் சிறப்பாக பணியாற்றியதை பாராட்டும் வகையில் ஆண்டுதோறும் அண்ணா பதக்கங்கள் வழங்கப்பட்டு வருகின்றன.
இந்த ஆண்டு காவல்துறை, தீயணைப்புத்துறையைச் சேர்ந்த 130 பேருக்கு அண்ணா பதக்கம் வழங்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். அதில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவில் பணியாற்றிய ஏடிஎஸ்பி இளங்கோவனுக்கு அண்ணா பதக்கம் வழங்குவது குறித்து சர்ச்சை எழுந்துள்ளது.
டிஜிபி மற்றும் உள்துறை செயலருக்கு மனு அனுப்பி சர்ச்சையை பொன் மாணிக்கவேல் தொடங்கிவைத்துள்ளார். அதில், தனக்கு கீழ் 2018ல் அவர் பணியாற்றியபோது 10க்கு 1.9 மதிப்பெண்ணே பெற்றிருந்ததாக குறிப்பிட்டிருந்தார்.
ஆனால், அதற்கு முன்பு 10க்கு 10 மதிப்பெண் பெற்றிருந்த பணி அறிக்கையை இளங்கோவன் காட்டியுள்ளார். கடந்த 8 ஆண்டுகளுக்கான தனது சொத்து விவரத்தை மட்டுமே அளிக்க வேண்டியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மணல் திருட்டைத் தடுத்தபோது உயிர்நீத்ததாக நெல்லை மாவட்டம் சிந்தாமணியை சேர்ந்த முதல்நிலை காவலர் ஜெதீஷ் துரைக்கு வீரதீர செயலுக்கான காவலர் பதக்கம் வழங்கப்பட உள்ளது. அவரது குடும்பத்தினரிடம் பதக்கத்துடன் 5 லட்சம் ரூபாய் வெகுமதியும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.













