கோவைப்புதூர் அண்ணாசதுக்கம் பகுதியைச் சேர்ந்த ராஜேந்திரன் என்பவரின் மகன் ராஜ்குமார் (32). இவர் கோவை புதூர் பகுதியில் உள்ள பாலாஜி மோட்டார்ஸ் என்ற நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். இந்த நிறுவனத்தின் உரிமையாளர் மருதாச்சலம் வேலை செய்த மாதங்களுக்கு உரிய சம்பளத்தை ராஜ்குமாருக்கு தரவில்லை என்று கூறப்படுகிறது.
இதையடுத்து ராஜ்குமார் நேற்று காலை நிறுவனத்திற்கு சென்று தனது மூன்று மாத சம்பள பாக்கியை கொடுக்குமாறு கேட்டுள்ளார். இதில் ஆத்திரமடைந்த பாலாஜி மோட்டார் நிறுவன உரிமையாளர் மருதாச்சலம் மற்றும் அவரது மகன்கள் பாலாஜி, சந்தோஷ் ஆகியோர் சம்பளத்தை கொடுக்க முடியாது என்று திட்டி உள்ளனர். தொடர்ந்து ராஜ்குமார் சம்பளம் கேட்டு வற்புறுத்தவே அங்கிருந்த இரும்பு கம்பியால் ராஜ்குமாரை அடித்து உதைத்தனர்.
இதில் காயமடைந்த ராஜ்குமாரை அருகில் உள்ளவர்கள் மீட்டு கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். மேலும் இதுகுறித்து ராஜ்குமார் அளித்த புகாரின் பெயரில் நிறுவன உரிமையாளர் மருதாசலம் அவரது மகன்கள் பாலாஜி ,சந்தோஷ் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.